சென்னை : பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் மற்றும் அவருடைய மகன் அனிருதா ஸ்ரீகாந்த் ஆகியோர் நேரலையில் கிரிக்கெட் அணியை தேர்வு செய்வது தொடர்பாக மோதிக்கொண்ட சம்பவம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழக கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் 2011 உலகக் கோப்பை தொடரின் போது தேர்வு தலைவராக இருந்தார். இந்த நிலையில் தற்போது அவரும் அவருடைய மகனும் இணைந்து ஆசிய கோப்பை தொடருக்கான அணியை தேர்வு செய்தார்கள்.

அப்போது இருவரும் ஷர்துல் தாக்கூர் அணியில் சேர்ப்பது தொடர்பாக மோதிக்கொண்டனர். ஷர்துலுக்கு பேட்டிங் விளையாட தெரியும் என்பதால் அவரை கண்டிப்பாக அணியில் சேர்க்க வேண்டும் என்றும் அவர் குறைந்த பட்சம் 4 அல்லது 5 ஓவர்கள் வீசினாலே போதும் என்றும் அனிருதா ஸ்ரீகாந்த் கூறினார். இதற்கு மறுப்பு தெரிவித்த தந்தை ஸ்ரீகாந்த் ஷர்துல் தாக்கூர் எல்லாம் ஒரு பவுலரே கிடையாது என்றும் அவருடைய பந்துவீச்சை எல்லாம் அடித்து நொறுக்கி விடுவார்கள்.
இதனால் தாம் அவரை அணியில் சேர்க்க மாட்டேன் என்றும் கூறினார். மேலும் அப்பாட்டக்கர் அணியிடம் ஷர்துல் தாக்கூர் நன்றாக விளையாடுவார் என்றும் மற்ற அணிகளுக்கு எதிராக அவர் தடுமாறுவார் என்றும் ஸ்ரீகாந்த் தெரிவித்தார். ஸ்ரீகாந்த்தின் இந்த பதிலால் கடுப்பான அவருடைய மகன் அனிருதா தங்களுக்கு பிடித்த வீரர் எவ்வளவு மோசமாக விளையாடினாலும் நீங்கள் அவரை அணியில் வைத்திருப்பீர்கள் என்றும் மற்ற வீரர்கள் எவ்வளவு சிறப்பாக செயல்பட்டாலும் அவர்கள் அப்பாட்டக்கர் அணியில் எதிராக விளையாடினார்கள் என்று மட்டம் தட்டுகிறீர்கள் என்றும் அனிருதா குற்றம் சாட்டினார்.
மேலும் இப்போது எந்த அணியும் அப்பாட்டக்கர் அணி கிடையாது என்று குறிப்பிட்ட அனிருதா ஸ்ரீகாந்த் கிரிக்கெட், வெறும் 3 அணிகள் மட்டும் விளையாடவில்லை என்றும் வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ் அணிகள் கூட இந்தியாவை ஒரு நாள் போட்டிகளில் வீழ்த்தி இருக்கிறது என்றும் அனிருதா ஸ்ரீகாந்த் கூறினார்.
மேலும் இந்த வீடியோவில் ஸ்ரேயாஸ் ஐயரை அணியில் சேர்க்க மாட்டேன் என்று ஸ்ரீகாந்த் கூறினார். அவர் ஒரு ஆண்டாக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவில்லை என்பதால் உலகக்கோப்பை போன்ற தொடரில் அவரை சேர்க்க போவதில்லை என்றும் ஸ்ரீகாந்த் கூறினார். தந்தையும் மகனும் கிரிக்கெட் போட்டிகளுக்காக அடித்துக் கொள்ளும் இந்த காட்சி சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.