சென்னை : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்து மோதிய ஆட்டத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் நேரலையில் பயன்படுத்திய வார்த்தை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தோல்வியே பெறாமல் விளையாடி வருகிறது. இந்த நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி வீரர்கள் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

இந்தப் போட்டியில் விராட் கோலி சதம் அடிப்பதற்காக சிங்கிள் ஓடாமல் இருந்தது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. விராட் கோலி 95 ரன்கள் இருந்த நிலையில் சிக்ஸர் அடிப்பதாக தூக்கி அடித்து கேட்ச் ஆனார்.இதன் மூலம் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்யும் வாய்ப்பு பறிபோனது. இந்த போட்டியின் போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழில் கிரிக்கெட் வர்ணனை செய்து கொண்டிருந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கோலியை பாராட்டி பேசும் போது வாய் தவறி ஓ என தொடங்கும் ஒரு கெட்ட வார்த்தை பேசி விட்டார்.
இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து பல ரசிகர்களும் சமூக வலைத்தளத்தில் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தனர். தமிழ் கிரிக்கெட் வர்ணனை வரம்பு மீறி செல்வதாகவும் இதுகுறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனமும் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ரசிகர்கள் வலியுறுத்தினர்.
ஆனால் இந்த சம்பவம் நடந்து 48 மணி நேரத்திற்கு மேல் ஆகியும் இதுவரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனமோ கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்தோ எந்த விளக்கமும் மணிப்பையும் தெரிவிக்கவில்லை. சொல்லப்போனால் ரசிகர்களின் குற்றச்சாட்டுகளை அவர்கள் காதில் வாங்கியது போலே தெரியவில்லை. இதனால் கடுப்பான ரசிகர்கள் தொலைக்காட்சிகளை கண்காணிக்கும் அமைப்பில் இந்த சம்பவம் குறித்து புகார் அளிக்க உள்ளதாகவும் எச்சரிக்கை கொடுத்திருக்கிறார்கள்.