“அன்று கம்பீர்.. இன்று கோலி..” இந்தியாவின் உலகக்கோப்பை திட்டம்.. ஸ்ரீகாந்த் சொன்ன சுவாரஸ்ய தகவல்!
மும்பை: இந்திய அணிக்காக கவுதம் கம்பீர் என்ன செய்தாரோ, அதனை விராட் கோலி செய்துவிட்டு தான் செல்வார் என முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி தற்போது இலங்கைக்கு எதிரான தொடர்களில் மோதி வருகிறது. இரு அணிகளுக்குள் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்கள் நடைபெற்று வருகின்றன.
ஆனால் 2023ம் ஆண்டின் முதல் தொடரில் இருந்தே இந்திய கிரிக்கெட் அணியின் திட்டங்களும், தேர்வுகளும் முற்றிலும் மாற்றப்பட்டுள்ளன.

உலகக்கோப்பை திட்டங்கள்
2023ம் ஆண்டின் இறுதியில் 50 உலகக்கோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இதற்காக தற்போதே 20 பேர் கொண்ட அணியை தேர்வு செய்துள்ளனர். அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து தயார் செய்யவுள்ளனர். இதே போல 2024ம் ஆண்டின் இறுதியில் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெறவிருக்கிறது. இதற்கு ஹர்திக் பாண்ட்யாவின் தலைமையில் இளம் படை தயாராகி வருகிறது.

ஸ்ரீகாந்தின் பேச்சு
இந்நிலையில் இதுகுறித்து கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பேசியுள்ளார். அதில், அணியில் தற்போது ஒவ்வொரு வீரரின் பணி குறித்து நன்கு விளங்கியுள்ளது எனத்தெரிகிறது. இஷான் கிஷானின் பலமே அதிரடி தான். சமீபத்தில் இரட்டை சதம் அடித்தார். அவரை போலவே வீரர்களுக்கு சுதந்திரம் கொடுத்து களத்திற்கு அனுப்புங்கள். அவர்கள் செய்வதை செய்யட்டும். ஒரு 3 - 4 வீரர்கள் வரை அணியில் அச்சமின்றி ஆடக்கூடியவர்கள் தேவை.

விராட் கோலி பணி
கடந்தமுறை உலகக்கோப்பையை வென்ற போது கவுதம் கம்பீர் ஒரு தூணை போல நிலைத்து நின்று வென்றுக்கொடுத்தார். அதே போன்று விராட் கோலியும் வரவுள்ள உலகக்கோப்பையில் செய்வார் என நினைக்கிறேன். இதே போல இஷான் கிஷான் போன்ற இளம் வீரர்களுக்கும் அவர் வழிகாட்டுவார் என நம்புகிறேன்.

தரமான அணி
தொடர்ந்து பேசிய அவர், ஒரு அணி என்றால் அச்சமின்றி ஆடும் 4 வீரர்கள், பேட்டிங் ஆல்ரவுண்டர்கள், பவுலிங் ஆல்ரவுண்டர்கள், தூண் போல ஆடக்கூடிய விராட் கோலி போன்றவர்களை கொண்டிருக்க வேண்டும். அதுதான் ஒருநாள் கிரிக்கெட்டிற்கு சரியாக இருக்கும் என கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications