“கம்பீர் செய்தது முட்டாள்தனம்.. வைபவ் சூர்யவன்ஷியின் வெறி”.. முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் ஆவேசம்
சென்னை: ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 18 பந்துகளில் அரை சதம் விளாசி வரலாற்றுச் சாதனை படைத்த இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, அதற்கு முன் இங்கிலாந்து தொடரின் போது பாதியில் அணியில் இருந்து நீக்கப்பட்டு இருந்தார். அப்போது அவரை நீக்கிய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரை முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சித்து இருக்கிறார்.
இங்கிலாந்து தொடரில் நீக்கப்பட்ட வைபவ் சூர்யவன்ஷி, அடுத்து ஜிம்பாப்வே தொடரில் வாய்ப்பு கிடைத்த உடன் முதல் போட்டியிலேயே சர்வதேச டி20 வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் அரை சதம் அடித்த வீரர் என்ற புதிய உலக சாதனையை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தனது யூடியூப் பக்கத்தில் இது குறித்துப் பேசிய முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த், "வைபவ் சூர்யவன்ஷி நிறைய திறமை படைத்த வீரர். இங்கிலாந்து தொடரில் தொடர்ச்சியாக 3 போட்டிகளில் (14, 13, 15 ரன்கள்) மட்டுமே ரன் அடிக்கவில்லை என்பதற்காக, அந்த 15 வயதுச் சிறுவனின் நம்பிக்கையை உடைக்கும் வகையில் கவுதம் கம்பீர் அவரை அணியிலிருந்து தூக்கியது ஒரு முட்டாள்தனமான முடிவாகும்" என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.
வைபவின் அர்ப்பணிப்பைப் பாராட்டிய ஸ்ரீகாந்த், "இங்கிலாந்து தொடர் முடிந்ததும் வைபவ் தனது வீட்டிற்குச் செல்லவில்லை. நேரடியாக ராஜஸ்தான் ராயல்ஸ் பயிற்சி முகாமிற்குச் சென்று, ஷார்ட் பந்துகளுக்கு எதிராகப் பேட்டிங் செய்ய தீவிர பயிற்சி எடுத்தார். தான் யார் என்பதை உலகிற்கு நிரூபிக்க வேண்டும் என்ற வெறி அவரிடம் இருந்தது. அவரது இந்த உழைப்பிற்கு நான் சல்யூட் செய்கிறேன்" என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய ஸ்ரீகாந்த், "பொதுவாக 3 போட்டிகளில் தோல்வியடைந்த பிறகு எந்த ஒரு வீரராக இருந்தாலும் அணியில் தனது இடத்தைக் காப்பாற்றிக் கொள்ள நிதானமாக விளையாடி ரன்களைச் சேர்க்கப் பார்ப்பார்கள். ஆனால் வைபவ் எந்தவித பயமும் இன்றி 250 ஸ்ட்ரைக் ரேட்டில் பந்துகளை நாலாபுறமும் சிதறடித்தார். 18 பந்துகளில் 50 ரன்கள் அடிப்பது அவருக்குக் குழந்தைகள் விளையாட்டு போல் உள்ளது" என்று பாராட்டினார்.


Click it and Unblock the Notifications
