
முதலில் பேட்டிங்
போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ரோகித் - ஷிகர் தவான் ஜோடி நிதானமான தொடக்கத்தை கொடுத்தனர். எனினும் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் ரோகித் சர்மா 28 ரன்களுக்கு பட்லரிடம் கேட்ச் ஆனார்.

பார்ட்னர்ஷிப்
இதனையடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் விராட் கோலி - ஷிகர் தவான் சிறப்பாக ஆடினர். விராட் கோலி அரை சதமடித்து (56) அவுட்டானார். மறுமுனையில் தொடர்ந்து அதிரடி காட்டிய ஷிகர் தவான் 98 ரன்களுக்கு ஆட்டமிழந்து சதத்தை மிஸ் செய்தார். பின்னர் வந்த ஹர்த்திக், ஸ்ரேயாஸ் ஆகியோரும் அடுத்தடுத்து வெளியேற இந்திய அணி திணற ஆரம்பித்தது.

க்ருணால்
இந்நிலையில் களத்தில் இறங்கிய கே.எல்.ராகுல் - க்ருணால் பாண்டியா அதிரடி காட்டினர். அறிமுக போட்டியிலேயே காட்டடி விளாசிய க்ருணால், 26 பந்துகளில் அரை சதமடித்து, அறிமுக போட்டியில் அதிவேகமாக அரை சதமடித்தவர் என்ற பெருமையை பெற்றார். அவர் 31 பந்துகளில் 58 ரன்களை எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அதில் 7 பவுண்டரிகளும் 2 சிக்ஸர்களும் அடங்கும். இதே போல் கே.எல்.ராகுலும் 43 பந்துகளில் 62 ரன்களை அடித்தார்.

பாச போராட்டம்
முதல் இன்னிங்ஸுக்கு பிறகு க்ருணால் பாண்டியா தனது அரை சதம் குறித்து பேச அழைக்கப்பட்டார். அப்போது அவர், தனது அரை சதத்தை மறைந்த தந்தைக்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்தார். ஆனால் அதன் பிறகு தந்தையை நினைத்து வருத்தப்பட்ட அவர், பாசத்தால் பேச முடியாமல் திணறினார். பிறகு அவரின் சகோதரர் அவரை கட்டிப்பிடித்து ஆறுதல் தெரிவித்தார். இந்த வீடியோ பார்ப்பவர்களை மனம் உருக வைத்துள்ளது.

மனம் உருகிய க்ருணால்
முன்னதாக போட்டிக்கு முன்னர் க்ருணால் பாண்டியாவுக்கு அவரின் இளைய சகோதரர் ஹர்த்திக் பாண்டியா இந்திய அணியின் கேப் வழங்கினார். அப்போது மிகவும் உருக்கமான க்ருணால், தனது தம்பியை கட்டியணைத்து நன்றி தெரிவித்தார். அதே போல மறைந்த அவரின் தந்தைக்கு கேப்பின் மூலம் மரியாதை செலுத்தினார். சகோதரர்கள் இருவரும் கட்டிப்பிடித்து ஆறுதல் தெரிவித்துக்கொண்டது அருகில் இருந்த இந்திய வீரர்களுக்கு பூரிப்பை ஏற்படுத்தியது.


Click it and Unblock the Notifications