இந்தியா வெற்றி
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அங்கு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், கடந்த ஞாயிறன்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில், இந்திய அணி வெற்றிப் பெற்றது.
க்ருனால் பாண்ட்யாவுக்கு கோவிட்
இந்நிலையில், இன்று (ஜுலை.27) இரண்டாவது டி20 போட்டி கொழும்புவில் இரவு 8 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. இந்த சூழலில், முதல் டி20 போட்டியில் கலந்து கொண்ட க்ருனால் பாண்ட்யாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதனை இலங்கை கிரிக்கெட் வாரியமும், இந்திய கிரிக்கெட் வாரியமும் எதிர்பார்க்கவில்லை. வீரர்கள் கடுமையான பயோ-பபுள் விதிமுறைகளில் வைக்கப்பட்டிருந்தனர்.
பிசிசிஐ ட்வீட்
அதையும் மீறி க்ருனால் பாண்ட்யாவுக்கு எப்படி கொரோனா தொற்று ஏற்பட்டது என்பது புரியாத புதிராகவே உள்ளது. இந்நிலையில், இன்று நடைபெறவிருந்த போட்டி நாளைக்கு (ஜுலை 28) ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், "க்ருனால் பாண்ட்யாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனால் 2வது டி20 போட்டி ஜுலை 28ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அனைத்து வீரர்களுக்கும் RT-PCR சோதனை எடுக்கப்பட்டுள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர் ரத்து?
இதில் மற்றொரு முக்கியமான விஷயம் என்னவெனில், வேறு எந்த வீரருக்கும் கொரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டால் தான் நாளை போட்டி நடைபெறும். மாறாக, வேறு யாருக்காவது கொரோனா கன்ஃபார்ம் ஆனது என்றால், தொடர் ரத்து செய்யப்படவும் வாய்ப்புள்ளது.