6 வயதில் தொடங்கிய பயணம்.. ஹர்திக்கும் மனிதன் தான்.. ரசிகர்கள் மறந்துவிட்டனர்.. க்ருணால் நெகிழ்ச்சி!
மும்பை: டி20 உலகக்கோப்பை தொடரை இந்திய அணி 17 ஆண்டுகளுக்கு பின் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. இதன்பின் நாடு திரும்பிய இந்திய அணிக்கு ரசிகர்கள் மறக்க முடியாத வரவேற்பை அளித்துள்ளனர். மும்பை நகரின் மெரைன் ட்ரைவ் பகுதியில் லட்சக்கணக்கான ரசிகர்கள் சூழ, இந்திய அணி வீரர்கள் திறந்தவெளி பேருந்தில் வெற்றிப் பேரணியில் ஈடுபட்டனர்.
இதன்பின் வான்கடே மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியின் போது ஹர்திக் பாண்டியாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஐபிஎல் தொடருக்கு முன்பிருந்த இந்திய அணி ரசிகர்களால் அதிகம் கிண்டல் செய்யப்பட்ட ஹர்திக் பாண்டியா, ஐபிஎல் தொடரின் போது மைதானத்திலேயே எதிர்ப்பை சந்தித்தார். அந்த எதிர்ப்பையெல்லாம் மொத்தமாக இப்போது கரகோஷமாக மாற்றி தரமான கம்பேக்கை கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா குறித்து அவரது சகோதரர் க்ருணால் பாண்டியா வெளியிட்டுள்ள பதிவில், நானும், ஹர்திக் பாண்டியாவும் தொழில்முறையாக கிரிக்கெட் விளையாட தொடங்கி 10 ஆண்டுகளாகிவிட்டது. அதில் கடந்த சில நாட்களாக நாங்கள் கண்ட கனவில் வாழ்ந்து வருகிறோம். ஒவ்வொரு இந்தியரும் தங்கள் நாயகர்களின் ஆட்டத்தை கண்டு பாராட்டும் வரும் போது, அந்த அணியில் எனது சகோதரரும் இருக்கிறார் என்பதே எமோஷனலாக உள்ளது.
கடந்த 6 மாதங்களாக ஹர்திக் பாண்டியாவின் பயணம் கடினமானதாக அமைந்தது. ஒரு சகோதரராக எனக்கு சோகத்தை அளித்தது. கிண்டல்கள் தொடங்கி ரசிகர்கள் ஏராளமான விஷயங்களை பேச தொடங்கினார்கள். ஆனால் ஹர்திக் பாண்டியாவும் உணர்ச்சியுள்ள ஒரு மனிதன் என்பதை மட்டும் நாம் மறந்துவிட்டோம். ஆனால் ஹர்திக் பாண்டியா அந்த கடினமான பயணத்தையும் சிரித்து கொண்டே எப்படியோ கடந்து வந்துவிட்டார். அது எவ்வளவு கடினமான விஷயம் என்று சகோதரனாக உணர்ந்து கொள்ள முடிகிறது.
எவ்வளவு எதிர்ப்பும், கிண்டலும் துரத்தினாலும் ஹர்திக் பாண்டியா ஒரு போதும் உழைப்பை மட்டும் கைவிடவில்லை. உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்பதில் கவனத்தை செலுத்தினார். இப்போது இந்திய அணியின் நீண்ட நாள் கனவை அடைய முழு உழைப்பையும் கொடுத்து வெற்றியை பெற்றுள்ளார். 6 வயதில் இருந்து உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே கனவாக இருந்தது. அந்த கனவை இந்திய அணிக்காக ஆடிய சில ஆண்டுகளிலேயே எட்டிப்பிடித்துள்ளார்.
இந்திய அணிக்காக விளையாடும் போது ஒருபோதும் ஹர்திக் பாண்டியா சமரசம் செய்து கொண்டதில்லை. ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு நிலையிலும் ஹர்திக் பாண்டியாவின் கதை முடிந்தது என்று ரசிகர்கள் எழுதத் தொடங்கிய போதெல்லாம், அவர் இன்னும் பலத்துடன் கம்பேக் கொடுத்துள்ளார். அவருக்கு எப்போதும் முதல் இந்திய அணிக்காக விளையாடுவதே முதன்மையான நோக்கம். பரோடாவில் பிறந்த வளர்ந்த சிறுவனுக்கு, இதைவிட பெரிய சாதனை எதுவும் கிடையாது. என் சகோதரனை நினைத்து பெருமை கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications