"இந்திய அணியே வேண்டாம் வேற நாட்டுக்கு போறேன்".. 32 வயதிலேயே UAE-இல் ஆடச் சென்ற டெஸ்ட் வீரர் பாரத்
துபாய்: இந்திய கிரிக்கெட்டே வேண்டாம், நான் வேறு நாட்டுக்குப்போய் விளையாடுகிறேன் என்ற முடிவோடு, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற 15 நாட்களிலேயே ஐக்கிய அரபு அமீரகத்தின் உள்ளூர் தொடரில் விளையாட ஒப்பந்தமாகியுள்ளார் இந்திய முன்னாள் டெஸ்ட் விக்கெட் கீப்பர் கேஎஸ் பாரத். 32 வயதிலேயே அவர் எடுத்துள்ள இந்த முடிவு கிரிக்கெட் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பரான கேஎஸ் பாரத், கடந்த ஜூன் 4 ஆம் தேதி திடீரென தனது ஓய்வு முடிவை அறிவித்தார். எதற்காக இந்த ஓய்வு என்ற காரணத்தை அவர் அப்போது வெளியிடவில்லை. இந்நிலையில், ஓய்வு அறிவித்த வெறும் 15 நாட்களிலேயே அமீரக கிரிக்கெட் வாரியம் (Emirates Cricket Board) நடத்த உள்ள உள்ளூர் இருநாள் வெள்ளைப்பந்து சாம்பியன்ஷிப் தொடருக்கான 'ஸ்டாலியன்ஸ்' அணியில் கேஎஸ் பாரத் சேர்க்கப்பட்டுள்ளார்.

ரிஷப் பண்ட் விபத்தில் சிக்கியபோது இந்திய டெஸ்ட் அணியில் இணைந்த கேஎஸ் பாரத், 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 221 ரன்கள் எடுத்துள்ளார். 18 கேட்சுகளைப் பிடித்துள்ளார். மேலும், ரஞ்சி கோப்பை தொடரில் 308 ரன்கள் குவித்து முச்சதம் அடித்த முதல் விக்கெட் கீப்பர் என்ற வரலாற்று சாதனையும் இவரிடம் உள்ளது. தற்போது இவர் விளையாட உள்ள அமீரகத்தின் இருநாள் வெள்ளைப்பந்து தொடர், வீரர்களின் நீண்ட வடிவ ஆட்டத்திறனை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு நாளைக்கு 80 ஓவர்கள் வீசப்படும். இந்த புதிய சவாலை எதிர்கொள்ள கேஎஸ் பாரத் தயாராகி வருகிறார்.
பொதுவாக இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் வீரர்கள் பிரான்சைஸ் முறைப்படி நடக்கும் டி20 லீக் தொடர்களில் விளையாடுவார்கள். ஆனால், கே எஸ் பாரத் ஐக்கிய அரபு அமீரக (UAE) உள்ளூர் போட்டிகளில் விளையாட உள்ளார். சர்வதேச கிரிக்கெட் விதிகளின்படி அதற்கு கேஎஸ் பாரத்துக்கு தகுதியும் உள்ளது. ஆனால், அவரால் உடனடியாக அந்நாட்டு தேசிய அணிக்காக விளையாட முடியாது. ஐசிசி விதிகளின்படி, ஒரு முழுநேர உறுப்பினர் நாட்டில் இருந்து மற்றொரு அசோசியேட் நாட்டிற்கு மாறும் போது 3 ஆண்டுகள் இடைவெளி இருக்க வேண்டும்.
கேஎஸ் பாரத் தனது கடைசி சர்வதேச போட்டியை கடந்த 2024 பிப்ரவரி மாதம் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடினார். இதன் அடிப்படையில், அவர் வரும் 2027 பிப்ரவரி மாதம் 8 மாத காத்திருப்பு காலத்திற்கு பிறகே யுஏஇ தேசிய அணிக்கு தேர்வு செய்ய தகுதி பெறுவார். அவர் அந்த நாட்டுக்காக விளையாட திட்டமிட்டுள்ளாரா? அல்லது பல நாடுகளில் நடைபெறும் டி20 லீக் தொடர்களில் மட்டும் விளையாட முடிவு செய்துள்ளாரா? என்பது விரைவில் தெரியவரும்.


Click it and Unblock the Notifications
