மும்பை: டி20 உலககோப்பையை இந்திய அணி வென்ற நிலையில், தற்போது வீரர்களுக்கு திருமணம் சீசன் தொடங்கி விட்டது. அண்மையில் அர்ஜூன் டெண்டுல்கர் திருமணம் நடைபெற்ற நிலையில், பிரித்வி ஷாவும் நிச்சயத்தார்த்தம் செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வீரர் குல்தீப் யாதவ், வன்ஷிகாவை திருமணம் செய்ய உள்ளார்.
மார்ச் 13 அன்று உத்தரகாண்டில் சடங்குகள் தொடங்க, மார்ச் 14 அன்று முசௌரியில் திருமணம் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து, மார்ச் 17 அன்று லக்னோவின் ஹோட்டல் சென்ட்ரம்-மில் வரவேற்பு நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த விழாவுக்கு பிசிசிஐ அதிகாரிகள், பாலிவுட் நட்சத்திரங்கள், வணிக உலகப் பிரமுகர்கள் மற்றும் முன்னாள், இந்நாள் இந்திய அணி வீரர்கள் எனப் பலரும் வரவுள்ளனர். குல்தீப் யாதவ் 2026 உலகக் கோப்பை அணியில் தேர்வு செய்யப்பட்டதால், 2025-ல் நடக்கவிருந்த திருமணம் தள்ளிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால், சமூக வலைத்தளத்தில் இந்த திருமணம் ரத்து செய்யப்பட்டதாக செய்திகள் உலா வந்த நிலையில், தற்போது திருமணம் நடக்க உள்ளது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

பல ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் அறிந்த குல்தீப் யாதவ், வன்ஷிகா ஜோடி, 2025 ஜூன் 4 அன்று லக்னோவில் நிச்சயதார்த்தம் செய்துகொண்டது. வன்ஷிகாவின் தந்தை எல்.ஐ.சி-யில் பணிபுரிகிறார். நெருங்கிய குடும்பத்தினர், நண்பர்கள் மட்டுமே கலந்துகொள்ளும் வகையில் திருமணம் எளிய முறையில் நடைபெறும்.

குல்தீப் யாதவ் 2026 ஐ.சி.சி டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு விளையாடினார். 2007-ல் போட்டி தொடங்கியதிலிருந்து, இந்தியா மூன்றாவது முறையாக உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது. உலகக் கோப்பையின் போது, பாகிஸ்தானுக்கு எதிராகக் குல்தீப் தனது மூன்று ஓவர்களில் 14 ரன்கள் மட்டும் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். குல்தீப்பின் தந்தை ராம் சிங் யாதவ், மார்ச் 8 அன்று உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை நேரில் சந்தித்து திருமண விழாவிற்கு அழைப்பு விடுத்தார்.