சென்னை: இந்திய அணியின் முதன்மை ஸ்பின்னர்களான அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் ஓய்வு பெற்றால், அவர்களது இடத்தை பிடிக்கும் வீரர்கள் அஸ்வின் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்திய அணியின் அடுத்த தலைமுறைக்கான ஸ்பின்னர்கள் தயாராக இருப்பதாகவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
துலீப் டிராபி தொடங்கியுள்ள நிலையில், இந்திய அணியின் அடுத்த தலைமுறைக்கான வீரர்கள் அடையாளம் காண வேண்டும் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் விராட் கோலி, ரோஹித் சர்மா, ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளிட்ட வீரர்கள் 35 வயதை கடந்து விளையாடி வருகிறார்கள். அவர்களால் அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரை மட்டுமே அதிகபட்சமாக விளையாட முடியும் என்று பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே காயம் ஏற்பட்டால், அவர்களது இடத்தில் விளையாடக் கூடிய வீரர்களை தயார் செய்ய வேண்டிய பொறுப்பு பிசிசிஐ-க்கு உள்ளது. அதற்கான தான் துலீப் டிராபியில் அனைத்து நட்சத்திர வீரர்களும் விளையாட வேண்டும் என்பதில் பிசிசிஐ தீவிரமாக இருந்தது. இந்த நிலையில் துலீப் டிராபி குறித்து அஸ்வின் தனது பார்வையை முன் வைத்துள்ளார்.
அதில் அஸ்வின் மற்றும் அனாலிஸ்ட் பிரசன்னா பேசுகையில், இந்தியாவை பொறுத்தவரை ஒரு வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டரை தேட வேண்டிய நிலை உள்ளது. ஏனென்றால் ஹர்திக் பாண்டியாவிற்கான மாற்று வீரரை விரைவாக கண்டறிய வேண்டும். அவர் ஒருவர் இல்லாததன் மூலமாக உலகக்கோப்பை இறுதியில் ஒரு கூடுதல் ஸ்பின்னர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.
அதேபோல் டி20 உலகக்கோப்பையில் அவர் விளையாடியதால், கூடுதலாக ஒரு ஸ்பின்னருடன் சென்று கோப்பையை வென்றுள்ளோம். அதனால் நிதிஷ் குமார் ரெட்டியின் செயல்பாடுகளை பார்க்க ஆவலாக உள்ளேன். அதேபோல் அடுத்த கட்ட ஸ்பின்னர்களை தயார் செய்ய வேண்டிய தேவை உள்ளது. ஏனென்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இன்னும் 8 மாதங்களில் முடிவடையவுள்ளது.
அதனால் அடுத்தக்கட்ட ஸ்பின்னர்களை தயார் செய்ய வேண்டிய தேவை அதிகமாகியுள்ளது. அஸ்வின், ஜடேஜாவுக்கு பின் குல்தீப் யாதவ், அக்சர் படேல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய 3 பேரும் தயாராக இருக்கின்றனர். ஜடேஜாவுக்கு சரியான மாற்று வீரராக அக்சர் படேல் உருவாகி வருகிறார். ஆனால் அஸ்வின் பேட்டிங் எளிதாக ஈடுகட்டும் வாஷிங்டன் சுந்தரால், அஸ்வினின் பவுலிங்கை ஈடுகட்ட முடியாது.
அஸ்வினால் 27 ஓவர்கள் பவுலிங் செய்து எளிதாக 5 விக்கெட்டுகளை வீழ்த்த முடியும். ஆனால் வாஷிங்டன் சுந்தரால் 5 விக்கெட்டுகளை வீழ்த்த முடியுமா என்பது தான் கேள்வி. அதேபோல் குல்தீப் யாதவ் முழுமையான பவுலர். அவர் ஒரு ஆல்ரவுண்டர் கிடையாது. அதுமட்டுமல்லாமல் பும்ரா, சிராஜ் மற்றும் ஷமி ஆகியோருக்கு பின் யார் அடுத்தக் கட்ட வேகப்பந்துவீச்சாளர்கள் என்ற கேள்வி உள்ளது.
இதுமட்டுமல்லாமல் ஒரு இடதுகை வேகப்பந்துவீச்சாளரை தேட வேண்டியுள்ளது. அர்ஷ்தீப் சிங், கலீல் அஹ்மத் மற்றும் யாஷ் தயாள் ஆகிய மூவரில் யாஷ் தயாளிடம் மட்டும் தான் நல்ல வேகம் இருக்கிறது. அதேபோல் நிதிஷ் குமார் ரெட்டி போன்ற வீரரை ஆஸ்திரேலியா மண்ணில் களமிறக்கி சோதனை செய்து பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.