லண்டன்: இந்தியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், தனது குழந்தை பருவ தோழியான வன்ஷிகாவை, கடந்த 4ஆம் தேதி நிச்சயம் செய்தார். லக்னோவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பங்கேற்றனர்.
இந்த சூழலில் தனது நிச்சயத்தார்த்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்த குல்தீப் தற்போது நீக்கி இருப்பது தான் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. குல்தீப்பின் வருங்கால மனைவி வன்ஷிகா, லக்னோவின் ஷ்யாம் நகரைச் சேர்ந்த அவர் எல்ஐசியில் பணிபுரிகிறார்.

தற்போது குல்தீப் புகைப்படத்தை நீக்கி இருப்பதால் திருமணம் கைவிடப்பட்டு இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே ஹர்திக், ஷமி , ஷிகர் தவான் போன்ற இந்திய வீரர்களின் திருமண வாழ்க்கை முறிவை சந்தித்த நிலையில், குல்தீப் காதல் வாழ்க்கை நிச்சயத்தார்த்தத்தை தாண்ட வில்லையா என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
குல்தீப் தற்போது இந்திய அணியுடன் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு தயாராகி வருகிறார். 30 வயதான குல்தீப் இதுவரை இந்திய அணிக்காக 13 டெஸ்ட், 113 ஒருநாள் மற்றும் 40 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அவரது கடைசி டெஸ்ட் போட்டி கடந்த ஆண்டு அக்டோபரில் பெங்களூரில் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் பங்கேற்றார்.
கான்பூரில் பிறந்த குல்தீப், இங்கிலாந்தில் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார், அங்கு அவர் 9 ஓவர்கள் வீசி ஒரு விக்கெட்டையும் எடுக்கவில்லை. 18 பேர் கொண்ட இந்திய அணியில் குல்தீப் ஒரே தனித்துவ சுழற்பந்து வீச்சாளராக உள்ளார். ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அணியில் உள்ள இரண்டு சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர்கள் ஆவார்கள்.
குல்தீப் இங்கிலாந்துக்கு எதிரான ஆறு போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 22.28 சராசரியுடனும் 38.70 ஸ்ட்ரைக் ரேட்டுடனும் 21 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2024ஆம் ஆண்டு தரம்சாலாவில் இங்கிலாந்துக்கு எதிராக அவர் தனது சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்தினார். முதல் இன்னிங்ஸில் 72 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை எடுத்தார். அஸ்வின் தற்போது ஓய்வு பெற்ற நிலையில், குல்தீப்க்கு தற்போது டெஸ்டில் நீண்ட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.