டெல்லி : இந்திய அணியில் எந்த ஸ்பின்னர் ஆடினாலும், இல்லையென்றாலும் குல்தீப் யாதவ்வுக்கு அணியில் இடம் உண்டு என்ற நிலைதான் தற்போது உள்ளது.
ஆனால், முன்பு குல்தீப் யாதவ்வும், சாஹலும் ஒரே நேரத்தில் தான் அணியில் இடம் பெற்று, ஒன்றாகவே ஆடினர். ஆனால், ஒரு கட்டத்தில் குல்தீப் யாதவ்வால் விக்கெட் வீழ்த்த முடியவில்லை. அதனால், அவரை நீக்கி விட்டு சாஹலை இந்திய அணி முதன்மை ஸ்பின்னராக தேர்வு செய்தது.

அணியின் முதன்மை ஸ்பின்னராக யுஸ்வேந்திர சாஹல் மாறிய பின், இடையே எத்தனையோ ஸ்பின்னர்கள் அணியில் ஆடினாலும், யாராலும் சாஹலை தாண்டி அணியில் முக்கியத்துவம் பெற முடியவில்லை.
ஆனால், குல்தீப் யாதவ் மீண்டும் அணியில் முக்கியத்துவம் பெற வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டார். அனில் வருவதும், போவதுமாக இருந்தார். இடையே அவருக்கு காயம் ஏற்பட்டது. அப்போது தான் அவரது கிரிக்கெட் வாழ்க்கையையே மாற்றிய அந்த சம்பவம் நடந்தது.
அதுவரை குல்தீப் யாதவ்வை அணியில் சேர்க்காமல் இருந்த காரணமே அவரது பந்துவீச்சில், பந்து சுழன்று, பிட்ச் ஆன உடன் திரும்பினாலும், அதில் வேகம் இல்லை. அதனால், துவக்கத்தில் குல்தீப் பந்துகளை சந்திக்க சிரமப்பட்ட பேட்ஸ்மேன்கள், அவரது மெதுவான பந்துவீச்சு தான் அவரது பலவீனம் என்பதை அறிந்து பந்தை கணித்து ஆடத் துவங்கினர்.
இதனால் தான் அவரால் சரியாக பந்து வீச முடியவில்லை என பல பயிற்சியாளர்கள், முன்னாள் வீரர்கள் குல்தீப் யாதவ்விடம் கூறி இருக்கிறார்கள். ஆனால், அதை எப்படி சரி செய்ய வேண்டும் என அவரிடம் யாருமே கூறவில்லை. இந்த நிலையில் தான் அவருக்கு காயம் ஏற்பட்டது.
பிசிசிஐ-யின் தேசிய கிரிக்கெட் அகாடமியில் காயம் ஏற்பட்ட இந்திய வீரர்களுக்கு அதில் இருந்து மீண்டு வரும் பயிற்சி அளிக்கப்படும். அங்கே சென்றார் குல்தீப் யாதவ். அங்கே அவருக்கு பிசியோதெரபிஸ்ட் ஆஷிஷ் கௌஷிக் சில யோசனைகளை கூறி இருக்கிறார்.
அதில் முக்கியமானது, குல்தீப் யாதவ் பந்து வீசும் போது தன் வலது கால் முட்டிக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் தன் முழு எடையையும் அங்கே குவிக்கிறார் என்பதை கண்டறிந்து, அதை மாற்றுமாறு கூறி இருக்கிறார் ஆஷிஷ். அப்படி செய்தால் இயல்பாகவே பந்து வீசும் வேகமும் அதிகரிக்கும் என்ற அந்த யோசனையை பிடித்துக் கொண்டார் குல்தீப்.
அதன் பின் ஆறு மாதம் அந்த யோசனையை அவர் பயிற்சியின் போதும், போட்டிகளிலும் செயல்படுத்தி வந்தார். அதன் விளைவாக அவருடைய விக்கெட்கள் எண்ணிக்கை அதிகரித்தது. பின் இந்திய அணியில் நிரந்தர இடம் பிடித்தார். குல்தீப் யாதவ் தற்போது திறமைகளை மேம்படுத்திக் கொண்டு வந்ததால் தான் அவருக்கு அணியில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
அதனால் தான் யுஸ்வேந்திர சாஹல் நன்றாகவே பந்து வீசினாலும் அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்டார். ஜடேஜா ஆல் - ரவுண்டர் என்பதால் தப்பித்தார். ஆனால், சாஹல் பேட்டிங்கில் பெரிதாக ரன் குவிக்க மாட்டார் என்பதால் குல்தீப் யாதவ் தான் தேவை என முடிவு செய்து இந்திய அணி சாஹலை நீக்கி விட்டது.