அஸ்வின் காயம்
கடந்த ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலும், ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரிலும் அஸ்வினுக்கு காயம் ஏற்பட்டது. அதன் காரணமாக அந்த தொடர்களில் ஒரு சில டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே அஸ்வின் பங்கேற்றார்.
உடற்தகுதி பற்றிய விமர்சனம்
இதனால், அஸ்வின் உடற்தகுதியை சரியாக பார்த்துக் கொள்வதில்லை என்ற விமர்சனம் எழுந்தது. கேப்டன் கோலி கூட இதை வெளிப்படையாக பத்திரிக்கையாளர்களிடம் பேசினார். அஸ்வினுக்கு பதில் ஜடேஜா, குல்தீப் யாதவ் டெஸ்ட் அணியில் வாய்ப்பு பெற்றனர்.
குல்தீப் யாதவ் அசத்தல்
இவர்களில் குல்தீப் யாதவ் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்டு ஐந்து விக்கெட்கள் வீழ்த்தினார். இதனை அடுத்து குல்தீப் யாதவை தொடர்ந்து டெஸ்ட் அணியில் வாய்ப்பு பெறுவார் என்ற பேச்சுக்கள் நிலவி வந்தது.
முக்கிய ஸ்பின்னர் யார்?
இந்த நிலையில் ரவி சாஸ்திரி அளித்த பேட்டியில், "ஏற்கனவே அவர் (குல்தீப் யாதவ்) வெளிநாட்டு டெஸ்ட் தொடர்களில் ஆடி ஐந்து விக்கெட்கள் எடுத்து விட்டார். எனவே, இனி அவர் தான் எங்கள் முக்கிய ஸ்பின்னர். இனி ஒரே ஒரு ஸ்பின்னர் மட்டுமே பயன்படுத்த எண்ணினால் அவரை தான் பயன்படுத்துவோம்" என்றார்.
குல்தீப் தான் நம்பர் 1
மேலும், அஸ்வினை விட குல்தீப் யாதவ்வுக்கு தான் இனி வாய்ப்பு என கூறினார். "எல்லோருக்கும் (அஸ்வினை குறிப்பிட்டு)ஒரு நேரம் உண்டு. ஆனால், இப்போது குல்தீப் தான் எங்கள் முன்னணி பந்துவீச்சாளர் மற்றும் நம்பர் 1 வெளிநாட்டு தொடர்களுக்கான ஸ்பின்னர்" எனக் கூறினார் ரவி சாஸ்திரி.
அஸ்வின் வாய்ப்பு?
ஏற்கனவே, ஒருநாள் போட்டிகளில் கோலி வந்த பின் வாய்ப்பை இழந்த அஸ்வின், டெஸ்ட் அணியில் மட்டுமே ஆடி வந்தார். இப்போது அதற்கும் வாய்ப்பில்லை என சொல்லாமல் சொல்லியுள்ளார் ரவி சாஸ்திரி. அஸ்வினை இனி இந்திய அணியில் பார்க்கவே முடியாதா?