எனக்கா இந்திய அணியில் இடமில்லை.. இங்கிலாந்து மண்ணில் கலக்கிய குல்தீப் யாதவ்
லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் குல்தீப் யாதவ் ஒரு முறை கூட விளையாட வாய்ப்பு தரப்படாத நிலையில், தற்போது அவர் யோர்க்ஷயர் அணிக்காக இங்கிலாந்து உள்நாட்டு ஒருநாள் கோப்பை தொடரில் அறிமுகமாகி கலக்கினார்.
இந்திய நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், கிளாமோர்கன் அணிக்கு எதிரான போட்டியில் 10 ஓவர்கள் வீசி 39 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.யோர்க்ஷயர் அணியுடன் ஐந்து ஒருநாள் கோப்பை போட்டிகள் மற்றும் மூன்று கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டிகளில் விளையாடுவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட குல்தீப் யாதவ், அறிமுக போட்டியிலேயே தனது திறமையை நிரூபித்துள்ளார்.

இடது கை ரிஸ்ட் ஸ்பின்னரான இவர், தனது 10 ஓவர்கள் கோட்டாவை முழுமையாக வீசி 2/39 என்ற சிறப்பான பந்துவீச்சுப் பதிவை வெளிப்படுத்தினார். இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் பெஞ்சில் அமரவைக்கப்பட்ட 31 வயதான கான்பூரைச் சேர்ந்த குல்தீப், தனது பந்துவீச்சின் கடைசி ஓவரில் இந்த இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.
கிளாமோர்கன் இன்னிங்ஸின் 44வது ஓவரின் முதல் பந்திலேயே அலெக்ஸ் ஹார்டனை 42 பந்துகளில் 30 ரன்கள் எடுத்த நிலையில், குல்தீப் ஆட்டமிழக்கச் செய்தார். அடுத்த இரண்டு பந்துகளுக்குப் பிறகு, ஜேமி மெகில்ராய் அடித்த பந்தை ஜாக் ஒயிட் கேட்ச் பிடிக்க, ரன் ஏதும் எடுக்காமல் அவர் வெளியேறினார்.
வேல்ஸின் நீத் நகரில் உள்ள தி க்னோல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் குல்தீப்பின் சிறப்பான பந்துவீச்சின் உதவியுடன் யோர்க்ஷயர் அணி, கிளாமோர்கன் அணியை 47 ஓவர்களில் வெறும் 186 ரன்களுக்கு சுருட்டியது. குல்தீப் தவிர, ஜார்ஜ் ஹில் மற்றும் ஜாக் ஒயிட் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். பெஞ்சமின் கிளிஃப் 8 ஓவர்கள் வீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
இங்கிலாந்து தொடரில் இந்திய ஸ்பின்னர்கள் தடுமாறிய நிலையில், குல்தீப் யாதவ் பட்டையை கிளப்புகிறார். இந்திய அணிக்காக 121 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 194 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள குல்தீப், அதன் பின்னர் செப்டம்பர் மாதம் மீண்டும் இங்கிலாந்து திரும்பும் அவர், யோர்க்ஷயரின் கடைசி நான்கு கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டிகளில் மூன்றில் விளையாட உள்ளார்.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் குல்தீப் சேர்க்கப்படாத நிலையில், அவர் யோர்க்ஷயர் அணியில் இணைந்தார். எனினும், அடுத்த மாதம் இலங்கைக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் அவர் மீண்டும் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications

