மும்பை: ஆசிய கோப்பை 2025 தொடருக்கு இந்திய அணியின் 15 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்ட நிலையில், இதலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், முன்னணி சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவை பிளேயிங் லெவனில் இருந்து விலக்குவதற்கு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. செப்டம்பர் 9 முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவுள்ள இந்த டி20 தொடரில், சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி பங்கேற்கிறது.
மேலும் ஷுப்மன் கில் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.இந்திய அணியில் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களான குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி மற்றும் அக்ஸர் படேல் இடம்பெற்றுள்ளனர். இருப்பினும், முன்னாள் இந்திய வீரர் மனிந்தர் சிங், குல்தீப் யாதவ் பிளேயிங் லெவனில் இடம்பெறுவது குறித்து சந்தேகம் வெளியிட்டுள்ளார். அக்ஸர் படேலின் ஆல்-ரவுண்டு திறன் மற்றும் வருண் சக்ரவர்த்தியின் சமீபத்திய அபார ஃபார்ம் ஆகியவை, அவர்களை முன்னணி தேர்வாக மாற்றியுள்ளன.

"இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களை ஆடவைத்தால், குல்தீப் யாதவை ஆடவைப்பார்களா என்று சந்தேகமாக உள்ளது. அக்ஸர் படேல் பேட்டிங்கும் செய்ய முடியும், மேலும் வருண் சக்ரவர்த்தியும் ஆடுவார்," என்று மனிந்தர் தெரிவித்தார்.வருண் சக்ரவர்த்தி, இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து டி20 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி, 7.66 என்ற எகானமியுடன் முன்னணி விக்கெட் எடுப்பவராக திகழ்ந்தார்.
இந்த ஃபார்ம், அவரை ஆசிய கோப்பை மற்றும் ஒருநாள் சாம்பியன்ஸ் டிராபி அணியில் இடம்பெறச் செய்தது. மறுபுறம், குல்தீப் யாதவ் காயம் காரணமாக இங்கிலாந்து தொடரை தவறவிட்டார், ஆனால் அவரது பயிற்சியாளர் கபில் பாண்டே, குல்தீப் மற்றும் வருண் இணைந்து பந்து வீசினால், எதிரணிகளுக்கு சிந்திக்க நேரமிருக்காது என்று நம்பிக்கை தெரிவித்தார்.
"குல்தீப் மிகவும் ஆர்வமாக உள்ளார். வருண் அவரை நன்கு பூர்த்தி செய்கிறார். பாகிஸ்தானுக்கு எதிராக இது ஒரு மறக்க முடியாத இரவாக இருக்கும்," என்று பாண்டே கூறினார்.இதை தொடர்ந்து பேசிய மணிந்தர், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் குல்தீப் ஆடியிருந்தால், இந்தியா 3-1 என்று வெற்றி பெற்றிருக்கும் என்று தெரிவித்தார்.
முதல் டெஸ்டில் இங்கிலாந்து 371 ரன்களைத் துரத்தியபோது, குல்தீப்பின் கூக்லிகள் மற்றும் லெக்-ஸ்பின்கள் அவர்களால் புரிந்து கொள்ளப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்று அவர் குறிப்பிட்டார்.இதற்கிடையில், ஆசிய கோப்பை அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் இடம்பெறவில்லை, இது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஷுப்மன் கில், ஐபிஎல் 2025-ல் 600 ரன்களுக்கு மேலும், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 754 ரன்களும் எடுத்து, துணைக் கேப்டனாக திரும்பியுள்ளார்.
அபிஷேக் ஷர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக உறுதி செய்யப்பட்டுள்ளனர். இதனால் கில் மூன்றாவது இடத்தில் ஆடலாம் என்று கருதப்படுகிறது.ஆசிய கோப்பை டி20 தொடர், 2026 டி20 உலகக் கோப்பைக்கு ஒரு முக்கிய தயாரிப்பாக பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் முதல் போட்டி செப்டம்பர் 10-ஆம் தேதி யுஏஇ-க்கு எதிராக துபாயில் நடைபெறவுள்ளது, அதைத் தொடர்ந்து செப்டம்பர் 14-ஆம் தேதி பாகிஸ்தானுடனான முக்கிய போட்டி நடைபெறும்.