மும்பை: இந்திய டெஸ்ட் அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜாவின் ஆதிக்கத்தால் ஏழு ஆண்டுகளாகப் போதிய வாய்ப்பின்றித் தவித்து வருபவர்தான் குல்தீப் யாதவ். டெஸ்ட் போட்டிகளில் அவர் இதுவரை விளையாடிய ஆட்டங்களில் சிறப்பான செயல்பாட்டை அளித்துள்ளார்.
13 போட்டிகளில் விளையாடி, 24 இன்னிங்ஸ்களில் 56 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். அவரது பௌலிங் சராசரி 22.16 என்பதாகும். ஸ்ட்ரைக் ரேட் 37.3 என்பதாகும். ரவிச்சந்திரன் அஸ்வினை விடச் சிறந்த பௌலிங் சராசரி மற்றும் ஸ்ட்ரைக் ரேட்டை வைத்திருக்கிறார்.

இந்த நிலையில், அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதால், குல்தீப் யாதவ் இனி டெஸ்ட் அணியின் முக்கியமான சுழற்பந்துவீச்சாளராக இருப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்பது சந்தேகமே என பிசிசிஐ வட்டாரங்களில் கூறப்படுகிறது. இங்கிலாந்து ஆடுகளங்களில் வேகப்பந்துவீச்சுக்குச் சாதகமான சூழ்நிலை நிலவும். எனவே, இந்திய அணியில் அதிகபட்சம் இரண்டு சுழற்பந்துவீச்சாளர்களே போதுமானது என்ற நிலை உள்ளது.
அதிலும் ஆல்ரவுண்டர்களைத்தான் ஆட வைக்க வேண்டும். அதன் மூலம் ஒரு இடத்தை கூடுதலாக வேகப்பந்துவீச்சாளர்களுக்கு அளிக்க முடியும் எனப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் திட்டமிட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. அதன்படி ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல் ஆகிய மூவரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்குத் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது.
அவர்களில் ஒருவர் அல்லது இருவர் பிளேயிங் லெவனில் இடம் பிடிக்கவும் வாய்ப்பு உள்ளது. ஒருவேளை குல்தீப் யாதவ் தேர்வு செய்யப்பட்டாலும், பிளேயிங் லெவனில் அவர் முதன்மை சுழற்பந்துவீச்சாளராக இருக்க மாட்டார் எனத் தெரிகிறது. ரவீந்திர ஜடேஜாவே முதன்மை சுழற்பந்துவீச்சாளராகச் செயல்படுவார். அவர் ஆல்ரவுண்டராகவும் இருப்பதால் அவருக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்.
2017ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான குல்தீப் யாதவ், இந்த ஏழு ஆண்டுகளில் 13 டெஸ்ட் போட்டிகள் மட்டுமே விளையாடி இருக்கும் நிலையில், இப்போதும் அவருக்குப் போதிய வாய்ப்பு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.