6 ரன் ஓவர் த்ரோ குடுத்தது தப்பு தான்.! உங்களால ஒண்ணும் பண்ண முடியாது..! தர்மசேனாவின் திமிர் பேச்சு
லண்டன்: உலக கோப்பை பைனலில் நான் கொடுத்த ஓவர் த்ரோ ரன்கள் தவறுதான், அதற்காக வருத்தப்பட மாட்டேன் என்று நடுவர் தர்மசேனா கூறியிருக்கிறார்.
உலக கோப்பை கிரிக்கெட் பைனலில், நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் மோதின. 50 ஓவர்கள் முடிவில் இரு அணிகளும் தலா 241 ரன்கள் எடுத்ததால் ஆட்டம் டை ஆனது. இதையடுத்து, ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது.
பின்னர் சூப்பர் ஓவரில் களமிறங்கிய இங்கிலாந்து 15 ரன்களை எடுத்தது. அவர்களை அடுத்து ஆடிய நியூசிலாந்தும் 15 ரன்கள் எடுத்தது. சூப்பர் ஓவரும் டிராவில் முடிந்தது. இதையடுத்து அதிக பவுண்டரி அடித்த அணி என்ற அடிப்படையில் இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
நியூசி. தோல்விக்கு நடுவரின் தவறான முடிவே காரணம் என நடுவர் சைமன் டபல் அதிர்ச்சி கருத்தை தெரிவித்துள்ளார். 50வது ஓவரில் கொடுக்கப்பட்ட ஓவர் த்ரோ ரன்கள் தவறு என்றும் கூறியிருந்தார். ஆனால், இந்த முடிவினை வழங்கியது ஐசிசி நடுவர்கள் பேனலில் இருக்கும் இலங்கையைச் சேர்ந்த குமார தர்மசேனா ஆவார்.

தர்மசேனா கருத்து
இந்நிலையில் அந்த முடிவு குறித்த தமது கருத்தை தர்மசேனா இப்போது கூறி இருக்கிறார். அவர் சொல்லியிருப்பதாவது: அந்த முடிவு தவறு தான் என்று ஒத்துக் கொள்கிறேன். இக்கட்டான நேரத்தில் பல முடிவுகளை எடுக்க வேண்டி உள்ளது.

எல்லாம் கவனிக்க வேண்டும்
உடனுக்குடனேயே டிவியில் அதனை எங்களால் பார்க்க முடியாது. பேட்ஸ்மேன் அடித்த உடன் பந்து எங்கே செல்கிறது? எப்படி பீல்டிங் செய்கிறார்கள்? அதற்குள் பேட்ஸ்மேன்கள் எவ்வளவு ரன் ஓடுகிறார்கள்? என அனைத்தையும் கவனிக்க வேண்டும்.

தவறு தான்
அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் இதுபோன்ற ஒரு தவறு நடந்து விட்டது. ஆனால் அதை பற்றி நான் வருந்தவில்லை. வருத்தப்பட போவதும் இல்லை. மேலும் ஐசிசி அப்படி ஒரு முடிவினை கொடுத்ததற்கு என்னை பாராட்டி உள்ளது என்றார்.

நடவடிக்கை வேண்டும்
ஆனால், ஒரு நடுவரின் தவறு ஒரு அணியின் கனவினையே சிதைத்து விட்டது. தவறான முடிவையும் அறிவித்துவிட்டு, அதை ஏற்றுக் கொண்ட பின்னரும் இவ்வாறு ஆணவத்துடன் பேசுவது எந்த வகையில் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி இருக்கின்றனர். இதுபோன்ற தவறுகளை செய்யும் நடுவர்கள் மீது, ஐசிசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications