
சிறப்பான செயல்பாடு
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி தன்னுடைய சிறப்பான செயல்பாடுகளால் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்து வருகிறார். இந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், தன்னுடைய நிலையான செயல்பாட்டின்மூலம் அதை தற்போது நடத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

அவசரம் இல்லை -கங்குலி
ஐசிசி தலைவராக இருந்த சஷாங்க் மனோகர், இந்த மாத துவக்கத்தில் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து அந்த பதவிக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த பதவிக்கு சவுரவ் கங்குலியின் பெயரும் அடிபட்டு வருகிறது. ஆனால் தனக்கு அப்படி ஒன்றும் வயதாகிவிடவில்லை என்றும் இந்த பதவிக்கு போட்டியிடும் அவசரம் இல்லை என்றும் கங்குலி கூறியுள்ளார்.

கங்குலி பொருத்தமானவர்
இந்நிலையில், இந்த பதவிக்கு பொருத்தமானவர் கங்குலிதான் என்று முன்னாள் தென்னாப்பிரிக்க கேப்டனும் கிரிக்கெட் தென்னாப்பிரிக்காவின் டைரக்டருமான கிரீம் ஸ்மித் சமீபத்தில் தெரிவித்துள்ளார். இதே கருத்தை கிரிக்கெட் உலகத்தில் பல்வேறு ஜாம்பவான்களும் கொண்டுள்ளனர். இதனிடையே, இலங்கை அணியின் ஜாம்பவான் குமார சங்ககாராவும் இதே கருத்தை கூறியுள்ளார்.

ஐசிசி பதவிக்கு முக்கியம்
தன்னுடைய சமயோசித புத்தி மற்றும் நிர்வாக அனுபவம் மூலம் சிறப்பாக செயல்பட்டுவரும் கங்குலி, ஐசிசி தலைவர் பதவிக்கு பொருத்தமானவர் என்று சங்ககாரா கூறியுள்ளார். தான் கங்குலியின் மிகச்சிறந்த ரசிகர் என்று தெரிவித்துள்ள சங்ககாரா, அவருக்கு சர்வதேச அளவில் யோசிக்கும் திறமை உள்ளதாகவும், இந்த பதவிக்கு அது மிகவும் முக்கியம் என்றும் மேலும் கூறியுள்ளார்.

கங்குலி குறித்து சங்ககாரா புகழ்ச்சி
ஐசிசியில் கங்குலி சிறப்பான மாற்றங்களை உருவாக்குவார் என்று கூறியுள்ள சங்ககாரா, கிரிக்கெட்டின் மீது அவருக்கு அதிகப்படியான விருப்பம் உள்ளதாகவும், பிசிசிஐ தலைவர், ஐசிசி தலைவர் என எந்த பொறுப்பை ஏற்றாலும் அவருடைய மனநிலை மாறாது என்றும் தெரிவித்துள்ளார். கோச்சாக செயல்பட்ட காலங்களிலும், சர்வதேச அளவில் வீரர்களுக்கிடையில் தொடர்பை ஏற்படுத்தியவர் கங்குலி என்றும் அவர் புகழ்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











