பெங்களூர்: கர்நாடக கிரிக்கெட் சங்க கூட்டத்தில் இருந்து முன்னாள் கிரிக்கெட் வீரர்களான அனில் கும்ப்ளே மற்றும் ஜவகல் ஸ்ரீநாத் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.
2010ம் ஆண்டில் கர்நாடக கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர், இந்தியாவின் சுழற்பந்து ஜாம்பவான் அனில் கும்ப்ளே. அந்த மூன்றாண்டு கால நிர்வாகத்தின்போது முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்கள் வெங்கடேச பிரசாத் துணை தலைவராகவும், ஜவகல் ஸ்ரீநாத் செயலாளராகவும் பதவி வகித்தனர்.

கர்நாடக கிரிக்கெட் சங்கத்துக்கு கடந்தாண்டு நடந்த தேர்தலில் புதிய நிர்வாகிகள் தேர்வாகினர். இதன்படி தலைவராக அசோக் ஆனந்த்தும், செயலாளராக பாட்டீலும் பதவி வகித்து வருகின்றனர். இந்நிலையில், கிரிக்கெட் சங்கத்தில் நிதி முறைகேடு நடப்பதாக அனில் கும்ப்ளே தரப்பு குற்றம் சாட்டி வருகிறது. நேற்று நடைபெற்ற வருடாந்திர பொதுகுழு கூட்டத்தில் பாதியிலேயே கும்ப்ளேயும், ஸ்ரீநாத்தும் வெளிநடப்பு செய்துவிட்டனர்.
நிருபர்களிடம் பேசிய கும்ப்ளே "நாங்கள் நிர்வாகத்தில் இருந்தபோது உறுப்பினர்களோடு நல்ல உறவு வைத்திருந்தோம். இப்போதுள்ள நிர்வாகிகள், சங்க உறுப்பினர்களை மதிப்பதேயில்லை. கிரிக்கெட் வளர்ச்சிக்காவே நாம் இங்கு உறுப்பினர்களாக உள்ளோமே தவிர, சுய லாபத்துக்காக கிடையாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.