இந்தூர்: ஐபிஎல் போட்டிகளில் இந்த சீசனில் மிகவும் குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளது பஞ்சாப் அணி. அதிரடி பேட்ஸ்மேன்கள் உள்ள பஞ்சாப், 88 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது.
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடரின் 11வது சீசனின் 48வது ஆட்டம் இந்தூரில் நடக்கிறது. இதில் புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ள கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், 7வது இடத்தில் உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதுகின்றன.
பிளே ஆப் சுற்றுக்கு சுலபமாக முன்னேறும் என்று எதிர்பார்க்கப்பட்ட அணியாக, மிகவும் வலுவான பேட்டிங் வரிசை கொண்ட அணியாக பஞ்சாப் இருந்தது. ஆனால், கடைசியாக விளையாடிய ஆட்டங்களில் தோல்வி அடைந்துள்ளது.
பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 15.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 88 ரன்களுக்கு பஞ்சாப் சுருண்டது. இது இந்த சீசனில் எடுக்கப்பட்ட மிகவும் குறைவான ஸ்கோராகும்.
சீசனின் 23வது ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 118 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மும்பை இந்தியன்ஸ் 18.5 ஓவர்களில் 87 ரன்களுக்கு சுருண்டது.
முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை பார்க்கும்போது, பஞ்சாப் அணியின் ஸ்கோர்தான் மிகவும் குறைவாகும். அதே நேரத்தில் ஒட்டுமொத்தமாக பார்த்தால், மிகவும் குறைந்த ஸ்கோர்களில் இரண்டாவதாக உள்ளது.
ஐபிஎல்லில் இதுவரையில் மிகவும் குறைவான ஸ்கோரை பெங்களூர் பெற்றுள்ளது. கடந்தாண்டு கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 49 ரன்கள் பெற்றதே மிகவும் குறைவான ஸ்கோராகும்.