ஐ.பி.எல். திருவிழாவின் க்ளைமாக்ஸ்: வெல்லப் போவது கொல்கத்தாவா? விஸ்வரூப பஞ்சாப் அணியா?
பெங்களூர்: 7வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் பலம் வாய்ந்த பஞ்சாப் அணியும், தொடர் தோல்வியில் இருந்து மீண்டு வலுவான அணியாக உருவெடுத்திருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸும் மோதுகின்றன.
2012 ஆம் ஆண்டு ஐ.பி.எல். சாம்பியனான கொல்கத்தா இரு முறை கோப்பையை வென்ற 2-வது அணி என்ற சாதனையை படைப்பதற்காகக் காத்திருக்கிறது. ஒவ்வொரு ஐ.பி.எல். தொடரிலும் சோபிக்காத அணியாக இருந்த பஞ்சாப் தற்போது விஸ்வரூபமெடுத்து இறுதிப் போட்டிக்கு வந்துள்ளது.
இந்தத் தொடரில் பல அணிகளை பஞ்சராக்கிய பஞ்சாப் அணியின் மிகப்பெரிய பலம் அதன் பேட்டிங்தான். வீரேந்திர சேவாக், மனன் வோரா, மேக்ஸ்வெல், டேவிட் மில்லர், விருத்திமான் சாஹா, கேப்டன் பெய்லி என அதிரடி மன்னன்களைக் கொண்டுள்ளது. இவர்களில் ஒருவர் நின்றுவிட்டாலும்கூட, ரன்னை குவித்துவிடுவார்கள்.

சேவாக் விஸ்வரூபம்
சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான 2-வது தகுதிச்சுற்றில் 58 பந்துகளில் 122 ரன்களைக் குவித்த சேவாக், கொல்கத்தா பந்துவீச்சாளர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பார். சேவாக், மேக்ஸ்வெல் இருவரில் ஒருவர் களத்தில் நின்றாலும்கூட, அந்த அணி நிச்சயம் 200 ரன்களுக்கு மேல் குவித்துவிடும் என்பதில் சந்தேகமில்லை.

மேக்ஸ்வெல் சாதிப்பாரா?
ஆனால் இந்த சீசனில் கொல்கத்தாவுடன் விளையாடிய 3 ஆட்டங்களில் ஒன்றில்கூட பஞ்சாப் அணி 150 ரன்களை எட்டவில்லை. அனைத்து அணிகளுக்கு எதிராகவும் அதிரடியாக விளாசித் தள்ளிய மேக்ஸ்வெல், கொல்கத்தாவுக்கு எதிரான 3 ஆட்டங்களிலும் முறையே 15, 14, 6 ரன்கள் மட்டுமே எடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நம்பிக்கை தரும் உத்தப்பா
கொல்கத்தா அணியின் பேட்டிங்கில் ராபின் உத்தப்பா நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்து வருகிறார். இந்த ஐபிஎல் போட்டியில் 655 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் முதலிடத்தில் இருக்கும் உத்தப்பா, பஞ்சாப் பந்துவீச்சாளர்களுக்கு சிம்மசொப்பனமாக இருப்பார்.

வலுவான பேட்டிங்
கேப்டன் கம்பீரும் சிறப்பாக ஆடும்பட்சத்தில் அந்த அணிக்கு நல்ல தொடக்கம் அமையும். மிடில் ஆர்டரில் மணீஷ் பாண்டே, ஷகிப் அல்ஹசன், யூசுப் பதான், ரியான் டென்தஸ்சாத்தே, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் நம்பிக்கையளிக்கின்றனர்.

பந்துவீச்சு
கொல்கத்தாவின் பந்துவீச்சில் மோர்ன் மோர்கல், உமேஷ் யாதவ், சுநீல் நரேன், ஷகிப் அல்ஹசன் கூட்டணி பஞ்சாப் பேட்ஸ்மேன்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும்.

சரணா? பதிலடியா?
முதல் தகுதிச்சுற்றில் கொல்கத்தாவிடம் தோல்வி கண்டதற்கு பஞ்சாப் பதிலடி கொடுக்குமா இல்லை மீண்டும் சரண் அடையுமா என்பது இன்று தெரிந்துவிடும்.


Click it and Unblock the Notifications