அதிர்ச்சி
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின் பந்துவீச்சை தேர்வு செய்தார். ஹைதராபாத் அணிக்கு பேர்ஸ்டோ 1 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சித் துவக்கம் அளித்தார். பின்னர் வார்னர் - விஜய் ஷங்கர் இணைந்து அணியை மீட்டனர்.
திணறல்
விஜய் 27 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து வெளியேறினார். நபி 12, மனிஷ் பாண்டே 19 ரன்கள் மட்டுமே எடுக்க கடைசி நேரத்தில் அந்த அணி ரன் குவிக்க முடியாமல் திணறியது. டேவிட் வார்னர் ஆட்டமிழக்காமல் ஆடினாலும், அதிரடியாக ரன் குவிக்க முடியாமல் தடுமாறினார்.
ஹூடா அசத்தல்
இறுதியில் வார்னர் 62 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹூடா, கடைசி மூன்று பந்துகளை சந்தித்து 14 ரன்கள் எடுத்து அசத்தினார். ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 150 ரன்கள் மட்டுமே எடுத்தது. பஞ்சாபின் அங்கிட் ராஜ்புத் அசத்தலாக பந்து வீசி ரன்களைக் கட்டுப்படுத்தினார். அவர் 4 ஓவர்களில் 21 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.
ராகுல் - மாயங்க் ஜோடி
அடுத்து பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணியில் கெயில் 16 ரன்களில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ராகுல் - மாயங்க் அகர்வால் 114 ரன்கள் சேர்த்தனர். மாயங்க் அகர்வால் 55 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
விக்கெட் சரிவு
அவர் சென்ற பின் தேவையே இல்லாமல் 18, 19வது ஓவர்களில் டேவிட் மில்லர் 1, மந்தீப் சிங் 2 ரன்களில் ஆட்டமிழந்து போட்டியில் பரபரப்பைக் கூட்டினர். கடைசி ஓவரில் 11 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், சாம் கர்ரன் முதல் மூன்று பந்துகளில் ஒற்றை ரன்களாக ஓடியே 5 ரன்கள் சேர்த்தார்.
பஞ்சாப் வெற்றி
4வது பந்தில் ராகுல் ஃபோர் அடித்தார். 5வது பந்தில் 2 ரன் ஓட, ஒரு பந்து மீதமிருந்த நிலையில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. கடைசி மூன்று ஓவர்களில் வெற்றிக்கு அருகே வந்த ஹைதராபாத் அணி தோல்வி அடைந்தது.
தோல்விக்கு காரணம்?
ஹைதராபாத் அணியில் சித்தார்த் கௌல், முஹம்மது நபி ரன்களை வாரி இறைத்ததும், பேட்டிங்கின் போது வார்னர் போன்ற அனுபவ பேட்ஸ்மேன் கூட ரன் எடுக்கத் திணறியதும் ஹைதராபாத் அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.