லாகூர் : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களாக இருக்கும் விராட் கோலி, கே எல் ராகுல், ரோகித் சர்மா போன்ற வீரர்கள் எல்லாம் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு முறை கூட டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது இல்லை.
அந்த அளவிற்கு இரு அணிகளுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் ஒரு காலத்தில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போதெல்லாம் அந்நாட்டு மக்கள் உற்சாக வரவேற்புகளை அளிப்பார்களாம்.

அப்படி ஒரு கதை தான் தற்போது வெளிவந்திருக்கிறது. இந்திய அணி 2004 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சென்று ஐந்து ஒருநாள் மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் இந்திய அணி மூன்றுக்கு இரண்டு என்ற கணக்கில் ஒரு நாள் தொடரையும் இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் வென்றிருக்கிறது. இந்த சுற்றுப்பயணத்தை பல இந்திய அணி வீரர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.
ஏனென்றால் பாகிஸ்தான் ரசிகர்கள் அவ்வளவு அன்பை கொடுத்தார்களாம். அதில் பாகிஸ்தான் அதிபராக இருந்த பர்வேஷ் முஷரப் தோனியை தலைமுடியை வெட்டாதீர்கள் என்று சொன்ன செய்தி உங்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால் அவர் தமிழக வீரர் ஒருவரை அழைத்து நீ தான்யா உண்மையில் வீரன் என்று பாராட்டியது நம் யாருக்குமே தெரிந்திருக்கி வாய்ப்பில்லை. 2004ஆம் ஆண்டு இந்திய அணியில் ஊடக மேலாளராக இருந்த அம்ரித் மாத்தூர் தற்போது ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார். அதில் பாகிஸ்தானில் இந்திய வீரர்களுக்கு எவ்வளவு மரியாதை கிடைத்தது என்று அவர் கூறியிருக்கிறார்.
அந்த புத்தகத்தில் குறிப்பாக தமிழக கிரிக்கெட் வீரர் பாலாஜிக்கு பாகிஸ்தானில் அவ்வளவு ரசிகர்கள் இருந்தார்கள் என எழுதி இருக்கிறார். அதில், பாலாஜிக்கு பாகிஸ்தான் கல்லூரி மாணவிகளிடையே அவ்வளவு பிரபலமாக இருந்தாராம். பாலாஜி சென்ற இடத்திற்கு எல்லாம் பாகிஸ்தான் ரசிகைகள் அவரை சூழ்ந்து கொண்டு ஆர்ப்பரிப்பார்களாம். ஒருமுறை பாலாஜியை பார்த்து பல பெண்கள் கத்தினார்களாம்.
இதனால் வெட்கப்பட்டு கொண்டு பாலாஜி ஒளிந்து கொள்ளும் நிலை எல்லாம் ஏற்பட்டதாம். அப்போதைய பாகிஸ்தான் அதிபர் பர்வீஸ் முஷரப் இந்திய வீரர்களுக்கு பார்ட்டி அளித்தாராம். அது தமிழக கிரிக்கெட் வீரர் பாலாஜியை பார்த்து உங்கள் நாட்டிற்கு நீங்கள் சிறந்த போர்வீரர் போல் விளங்குகிறீர்கள். உங்களுடைய உத்வேகமான விளையாட்டுக்கு என்னுடைய சல்யூட் என்றும் பர்வேஸ் முசரப் கூறினார். இதையெல்லாம் பார்த்த பாலாஜி ஒருமுறை அம்ரித்திடம் இதெல்லாம் ஓகே ஆனால் சென்னையில் என்னை யாருமே கண்டுகொள்ளவில்லை என்று அப்போது வருத்தப்பட்டாராம்.