துபாய்: உலகின் விளையாட்டு திருவிழாக் கருதப்படும் ஒலிம்பிக் போட்டிகள் 2028 ஆம் ஆண்டு அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நடைபெறுகிறது. இந்த தொடரில் 128 ஆண்டுகளுக்குப் பிறகு கிரிக்கெட் தொடர் ஒலிம்பிக்கில் இடம்பெறுகிறது. உலகில் அதிக மக்களால் பார்க்கப்படும் இரண்டாவது விளையாட்டாக கருதப்படும் கிரிக்கெட் இல்லாமல் இத்தனை ஆண்டு காலமாக ஒலிம்பிக் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் கிரிக்கெட் போட்டிகளை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மத்தியில் பிரபலப்படுத்தும் விதமாக ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டிருக்கிறது. ஒலிம்பிக் போட்டிகள் இரண்டு அல்லது மூன்று வாரங்கள் மட்டுமே நடக்கும். இதனால் கிரிக்கெட் போட்டிகளை எப்படி இவ்வளவு விரைவாக நடத்துவது?

எத்தனை அணிகளை ஒலிம்பிக்கில் விளையாட வழிவகை செய்வது என்பது குறித்து ஐசிசி நிர்வாகிகள் ஒலிம்பிக் சம்மேளன அதிகாரிகளுடன் இணைந்து துபாயில் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் ஆடவர் மற்றும் மகளிர் என இரு பிரிவிலும் சேர்த்து 12 அணிகளை பங்கேற்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தெரிகிறது.
ஆடவர் சார்பாக ஆறு அணிகள், மகளிர் சார்பாக ஆறு அணிகள் என மொத்தம் 28 போட்டிகளை கிரிக்கெட்டில் நடத்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த ஆறு அணிகளை எவ்வாறு தேர்வு செய்வது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. முதலில் ஐசிசி t20 தரவரிசை பட்டியலில் முதல் ஆறு இடங்கள் பிடிக்கும் அணி இந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் என முதலில் முடிவு செய்யப்பட்டது.
ஆனால் தற்போது இந்த முடிவு கைவிடப்பட்டது. அதற்கு மாறாக ஒவ்வொரு கண்டத்திலும் சிறந்த அணியை ஒலிம்பிக் தொடரில் பங்கேற்க செய்யப்படும் என முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. அதன்படி ஆசிய கண்டத்தில் இருந்து இந்தியாவும், ஐரோப்பிய கண்டத்தில் இருந்து இங்கிலாந்தும் ஓசியான ஆஸ்திரேலிய கண்டத்தில் இருந்து ஆஸ்திரேலியா அணியும், ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து தென்னாப்பிரிக்கா அணியும், அமெரிக்க கண்டத்தில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் அணியும், போட்டியை நடத்தும் அமெரிக்காவும் பங்குபெற முடிவெடுக்கப்பட்டு இருக்கிறது.
இதன் காரணமாக ஒலிம்பிக் போட்டியில் பாகிஸ்தான் ஆடவர் மற்றும் மகளிர் அணி பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. எனினும் பாகிஸ்தான் அணி இந்தியாவுடன் ஒலிம்பிக்கில் மோதினால் அது பெரிய அளவு வர்த்தக லாபத்தை ஒலிம்பிக் மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு கொடுக்கும் என்றும், இதனால் பாகிஸ்தான் அணியையும் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து இறுதி முடிவு அடுத்தடுத்த மாதங்களில் எடுக்கப்படும்.