மும்பை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சீனிவாசன் ஏலத்தையும் நடுவர்களையும் பிக்சிங் செய்வார் என்று முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடி பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை வைத்து இருக்கிறார். நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற லலித் மோடி, ஐபிஎல் தொடரில் நடைபெற்ற பல விஷயங்கள் குறித்து பேசி இருக்கிறார்.
இதில் சிஎஸ்கே விளையாடும் போட்டிகளுக்கு சென்னையை சேர்ந்த நடுவர்களை வைத்து போட்டியை மறைமுகமாக ஃபிக்சிங் செய்வார் என்று சீனிவாசன் மீது அவர் கடும் குற்றச்சாட்டை முன்வைத்து இருக்கிறார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள லலித் மோடி, ஆரம்பத்தில் ஐபிஎல் தொடரை சீனிவாசனுக்கு பிடிக்கவில்லை.ஐபிஎல் ஒத்து வராத ஒரு தொடர் என நினைத்தார். ஆனால் அனைத்தும் சரியாக நடந்து வெற்றி பெற்றவுடன், பலரும் ஐபிஎலில் முக்கிய பொறுப்புக்குள் வரவேண்டும் என நினைத்தார்கள்.
அப்போது பிசிசிஐயின் செயலாளராக சீனிவாசன் செயல்பட்டார். அவர் எப்போதுமே எனக்கு எதிராக செயல்படுவார். அவருடைய நடவடிக்கையை நான் எதிர்ப்பதால் ஐபிஎல் தொடரில் பல முறைகேடுகளை அவர் செய்தார். ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போது சென்னையை சேர்ந்த நடுவர்களை நியமித்து போட்டியை நடத்துவார்.
இதை நான் எதிர்த்து கேள்வி கேட்டேன். இதுவும் ஒரு பிக்சிங் தான் என்று நான் அவருக்கு எதிராக குரல் எழுப்பினேன். இதனால் என் மீது கடும் கோபம் கொண்ட சீனிவாசன், எனக்கு எதிராக செயல்பட தொடங்கினார். சீனிவாசன் போட்டிகளை மட்டுமல்லாமல் ஏலத்தையும் பிக்சிங் செய்வார். 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் தமக்கு இங்கிலாந்து வீரர் Flintoff வேண்டும் என்றும் மற்ற அணிகள் யாரும் அவரை ஏலத்தில் கேட்கக் கூடாது என்றும் என்னிடம் வற்புறுத்தினார்.
ஐபிஎல் தொடர் வெற்றிகரமாக நடைபெற வேண்டும் என்பதற்காக நான் அதையும் செய்தேன். சீனிவாசனை எதிர்ப்பதன் மூலம் மற்ற கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை பாதிக்க கூடாது என்பதற்காக நான் அதற்கு ஒப்புக் கொண்டேன். அனைத்து அணிகளிடமும் பிலிண்டாப்பை யாரும் கேட்காதீர்கள் என்று கூறினேன். எங்களுடைய காட்டில் சீனிவாசன் ஒரு முள்ளாகவே இருந்தார். அந்த முள்ளை களையெடுக்க நான் முயற்சி செய்தேன் என்று லலித் மோடி கூறியிருக்கிறார். லலித் மோடியின் இந்த குற்றச்சாட்டு தற்போது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.