மும்பை: பிக்ஸிங் உள்ளிட்ட பல்வேறு புகார்களில் சிக்கியிருப்பதால் 7வது ஐ.பி.எல். போட்டிகளை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவர் சஷாங் மனோகர் வலியுறுத்தியுள்ளார். சஷாங் மனோகரின் கோரிக்கைக்கு லண்டனில் இருந்து லலித் மோடியும் ஆதரவு தெரிவித்துள்ளார்.
6வது ஐ.பி.எல். போட்டிகளின் பிக்ஸிங் உள்ளிட்ட பல முறைகேடுகளில் ஈடுபட்டதற்காக வீரர்கள், அணி நிர்வாகிகள் பலரும் சிக்கி சிறைக்குப் போனார்கள். இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்னமும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் 7வது ஐ.பி.எல். போட்டிகள் ஏப்ரல் 16-ந் தேதி முதல் தொடங்க இருக்கிறது. ஆனால் தற்போதைய புகார்கள், வழக்குகள் விசாரணை முடிவடையும் வரை ஐ.பி.எல். போட்டிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவர் சஷாங் மனோகர் வலியுறுத்தியுள்ளார்.
சஷாங் மனோகரின் இந்த கோரிக்கையை தாம் ஏற்படதாக லண்டனில் இருந்து முன்னாள் ஐ.பி.எல். தலைவர் லலித் மோடி வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.
கடந்த 2010ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக சஷாங் மனோகர் இருந்தபோதுதான் லலித் மோடி மீது நிதி மோசடி குற்றச்சாட்டுகள் எழுந்தது.. அவர் கிரிக்கெட் வாரியத்தில் இருந்தும் நீக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.