மும்பை: ஐபிஎல் தொடரின் பிரம்மாண்ட வளர்ச்சிக்கு ஜெய்ஷா தான் காரணம் என லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா பதிவிட்டிருந்த நிலையில், அவரை கோமாளி என ஐபிஎல் தொடரின் முன்னாள் தலைவர் லலித் மோடி கடுமையாக விமர்சித்துள்ளார். இது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சமீபத்தில் ஐபிஎல் தொடரில் விளையாடும் 2 முக்கிய அணிகள் பல ஆயிரம் கோடிகளுக்கு விற்கப்பட்டன.
கடந்த 2008 ஆம் ஆண்டு சுமார் 270 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தற்போது கல் சோமானி தலைமையிலான அமெரிக்க குழுவிற்கு 1.63 பில்லியன் டாலருக்கு அதாவது சுமார் 15000 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. அதேபோல 485 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஆதித்யா பிர்லா குரூப் உள்ளிட்ட நிறுவனங்களை உள்ளடக்கிய குழுவிற்கு 1.78 பில்லியன் டாலருக்கு அதாவது சுமார் 16600 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டு ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக விலைக்கு விற்கப்பட்ட அணி என்ற சாதனையை படைத்துள்ளது.

இந்த பிரம்மாண்ட விற்பனை குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்த சஞ்சீவ் கோயங்கா, "ஒரே வாரத்தில் 2 அணிகள் தலா 15000 கோடி ரூபாய்க்கும் மேல் விற்கப்பட்டுள்ளன. ஐபிஎல் தொடரின் கட்டமைப்பே இந்த மாபெரும் மதிப்பிற்கு காரணமாகும். குறிப்பாக டிஜிட்டல் மற்றும் ஒளிபரப்பு உரிமைகள், முதலீட்டாளர்களுக்கு அளிக்கப்பட்ட நம்பிக்கை போன்றவற்றிற்கு ஜெய்ஷாவின் தொலைநோக்கு பார்வையே முக்கிய காரணம்" எனப் பாராட்டியிருந்தார். ஐபிஎல் தொடரை உருவாக்கிய லலித் மோடியின் பெயரை அவர் எங்கும் குறிப்பிடவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த லலித் மோடி, சஞ்சீவ் கோயங்காவை கடுமையாக சாடியுள்ளார். "இந்த ஐபிஎல் மாடலை உருவாக்கியது யார் என்பதை இவர் மறந்துவிட்டார். இவருக்கு ஞாபக மறதி வந்துவிட்டது. சஞ்சீவ் கோயங்கா ஒரு கோமாளி. இவருக்கு பதிலாக இவரது சகோதரர் ஹர்ஷ் கோயங்கா ஐபிஎல் அணியின் உரிமையாளராக இருந்திருக்கலாம். அவர் ஒரு உண்மையான கிரிக்கெட் ரசிகர். ஒரு ட்வீட் மூலம் வரலாற்றை மாற்றிவிடலாம் என நினைக்கும் இந்த கோமாளிக்கு கிரிக்கெட் குறித்து எந்த அறிவும் இல்லை" என்று மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஐபிஎல் ஒளிபரப்பு உரிமைகளை வழங்கியதில் பண மோசடி மற்றும் வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, லலித் மோடி கடந்த 2010 ஆம் ஆண்டு இந்தியாவை விட்டு வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் மீண்டும் ஐபிஎல் விவகாரத்தில் உரிமையாளரை வசைபாடியுள்ளது இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது.
