டெல்லி: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி.க்குப் போட்டியாக ஒரு புதிய கிரிக்கெட் அமைப்பை உருவாக்க உள்ளதாக ஐ.பி.எல் அமைப்பின் முன்னாள் தலைவர் லலித் மோடி தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல். தலைவராக இருந்த லலித் மோடி நிதி மோசடி குற்றச்சாட்டில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். தற்போது இங்கிலாந்தில் தலைமறைவாக இருக்கிறார் லலித் மோடி.

லலித் மோடிக்கு உதவியதாக மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரராஜே சிந்தியா ஆகியோர் சர்ச்சையில் சிக்கியுள்ளனர். இவர்கள் ராஜினாமா செய்யும் வரை நாடாளுமன்றத்தை முடக்கியே தீருவோம் என்று காங்கிரஸ் வரிந்து கட்டிக் கொண்டு நிற்கிறது.
இந்த களேபரங்களைப் பற்றியெல்லாம் கவலைப் படாமல் ஆஸ்திரேலியாவின் ஏ.பி.சி. ஊடகத்துக்கு லலித் மோடி ஒரு பேட்டியளித்துள்ளார்.
அதில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி.க்கு போட்டியாக புதிய கிரிக்கெட் அமைப்பைத் தொடங்க இருப்பதாக கூறியுள்ளார்.
மேலும் ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டையும் நடத்துவதற்காக ஒலிம்பிக் அமைப்புடன் இணைந்து செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்த யோசனை திடீர் என்று தோன்றியது அல்ல; பல ஆண்டுகளாக இந்த அமைப்பிற்காக உழைத்துக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக லலித் மோடியின் பரம வரியான என். சீனிவாசன் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.