
லலித் மோடி மனுத்தாக்கல்
இந்நிலையில் ராஜஸ்தான் மாநில கிரிக்கெட் சங்கத்துக்கு இன்று தேர்தல் நடைபெற இருக்கிறது. இத்தேர்தலில் தலைவர் பதவிக்கு புதிய திருப்பமாக லலித் மோடி வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.

பிசிசிஐ எச்சரிக்கை
ஆனால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமோ, லலித் மோடி போட்டியிடுவதை அனுமதித்தால் ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்தை சஸ்பென்ட் செய்வோம் என்று எச்சரித்தது. இதைத் தொடர்ந்து மோடி தேர்தலில் போட்டியிடுவதற்கு, ராஜஸ்தானின் பில்வாரா மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவர் ராம்பால் ஷர்மா எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இவர், தற்போதைய ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் சி.பி.ஜோஷியின் ஆதரவாளர்.

வேட்புமனு மீது ஆய்வு
இதனிடையே வேட்பு மனுக்கள் மீது நேற்று ஆய்வு செய்யப்பட்டன. தேர்தல் கண்காணிப்பாளராக உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நீதிபதி நரேந்திர மோகன் கஸ்லிவால் வேட்புமனுக்கள் மீது ஆய்வு நடத்தினார்.

மோடிக்கு கடும் எதிர்ப்பு
மோடியின் பாஸ்போர்ட், மும்பை பாஸ்போர்ட் அலுவலகத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது, லண்டனில் உள்ள அவரால் நிர்வாக விஷயங்களில் தினந்தோறும் பங்கேற்க முடியாது, தவிர, பிசிசிஐ அவருக்கு வாழ்நாள் தடை விதித்துள்ளது. எனவே மோடியை தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கக் கூடாது என ராம்பால் ஷர்மாவின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார்.

பிசிசிஐ தடை பொருந்தாது - மோடி தரப்பு
ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மோடியின் வழக்கறிஞர், இந்த அமைப்பு ராஜஸ்தான் விளையாட்டு சட்டத்தின் கீழ் வருவதால், பிசிசிஐ தடை விதித்திருப்பது இதற்கு பொருந்தாது என வாதாடினார்.

வேட்பு மனு ஏற்பு
இரு தரப்பு வாதத்தையும் ஏற்ற நீதிபதி நரேந்திர மோகன், மோடியின் வேட்பு மனுவை ஏற்பதாகத் தெரிவித்தார்.

14 பேர் போட்டி
ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத் தலைவர் பதவிக்கு மோடி உட்பட மொத்தம் 14 பேர் மனுத் தாக்கல் செய்துள்ளனர். அதில் இருவர் மட்டுமே மோடியின் எதிர்ப்பாளர்கள். மொத்தம் உள்ள 33 மாவட்டங்களில் 24 மாவட்ட பிரதிநிதிகளிடம் மோடி ஆதரவாளர்கள் ஆதரவு கோரி வருகின்றனர்.

மோடி வெல்வது உறுதி
இதனால் மோடி, ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத் தலைவராகத் தேர்வாவதற்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது. நாளை முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது

மோடி-சீனி மோதல்
அப்படி ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக லலித் மோடி தேர்வு செய்யப்பட்டால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் மோதல் ரகளை கட்டும் என தெரிகிறது. ஏற்கெனவே இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் சீனிவாசனுடன் மல்லுக்கு நிற்கும் மோடி இனி என்னென்ன அஸ்திரங்களை ஏவி விடப்போகிறாரோ?
கிரிக்கெட்டைப் போலவே அதன் நிர்வாக உள்குத்துகளும் செம விறுவிறுப்புதான்!


Click it and Unblock the Notifications











