கொழும்பு: ஐபிஎல் போட்டிகளில் எங்களது அனுமதி இல்லாமல் லசித் மலிங்கா விளையாட முடியாது என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளதால் மும்பை இந்தியன்ஸ் அணியில் மலிங்கா விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தன் இஷ்டப்படி கிரிக்கெட் தொடர்களை தேர்வு செய்து மலிங்கா விளையாடுவதால் இலங்கை கிரிக்கெட் வாரியம் கடுப்பாகியுள்ளது. இதையடுத்து தங்களிடம் அனுமதி பெறாமல் ஐபிஎல் போட்டிகளில் மலிங்கா விளையாடக் கூடாது என்று வாரியம் அறிவித்து விட்டது.

இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் திலங்கா சுமதிபாலா கூறுகையில், மலிங்காவின் உடல் தகுதியை வாரியம் பரிசீலிக்க வேண்டியுள்ளது. அதன் பிறகே அவருக்கு பிட்னஸ் சான்றிதழ் அளிக்கப்படும். அவரால் எங்களது அனுமதி இல்லாமல் விளையாட (ஐபிஎல் போட்டிகளில்) முடியாது. எங்களை மீறிப் போனால் போய் சும்மா உட்கார்ந்து விட்டுத்தான் வர முடியும் என்றார் சுமதிபாலா.
ஆசியாக் கோப்பைத் தொடரிலிருந்தே மலிங்காவுக்கும், இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கும் இடையே முட்டிக் கொண்டிருக்கிறது. கடந்த மாதம் இந்தியாவில் நடந்த உலகக் கோப்பைத் தொடருக்கு முன்பாக மலிங்காவை கேப்டன் பதவியிலிருந்து விலகுமாறு கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டது. இதனால் அணியில் இடம் பெற்றாலும் கூட அவர் விளையாடவில்லை. மாறாக தொடரை விட்டு விலகி விட்டார். பிட்னஸ் சரியில்லை என்று அவரே காரணமும் கூறியிருந்தார்.
இதனால் முக்கியப் பந்து வீச்சாளரான மலிங்கா இல்லாமல் தொடரைச் சந்தித்த இலங்கை படு தோல்வியுடன் வெளியேற நேரிட்டது. முதல் சுற்றோடு அதன் கதை முடிந்தது.
இந்த நிலையில் ஐபிஎல் போட்டிகளில் விளையாட ஆயத்தமாக இருந்தார் மலிங்கா. ஆனால் இலங்கை கிரிக்கெட் வாரியம் முட்டுக்கட்டை போட்டு விட்டது.