சென்னை : முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், பிரபல வர்ணனையாளருமான லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் அஸ்வின் குறித்து மோசமான சில பதிவுகளை ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.
அஸ்வின் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், லக்ஷமன் சிவராமகிருஷ்ணன் சரமாரியாக அஸ்வினை தாக்கி பல ட்வீட்களை போட்டு இருக்கிறார்.
அஸ்வின் பிட்ச்களை சேதம் செய்தே இந்தியாவில் அதிக விக்கெட்களை வீழ்த்தி இருப்பதாக அவர் பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். அவர் மைதான ஊழியர்களிடம் பிட்ச்சை எங்கே சேதம் செய்ய வேண்டும் என சொல்வதை தானே நேரில் பார்த்துள்ளதாகவும் கூறி பரபரப்பை கிளப்பி இருக்கிறார்.

ரசிகர்களுடன் ட்விட்டரில் சில மணி நேரம் செலவிட்ட அவர், ஒருவர் அஸ்வினை பாராட்டி பேசிய உடன் அஸ்வின் குறித்து சில அதிர வைக்கும் விஷயங்களை பகிரத் தொடங்கினார்.
முதலில், "இந்திய பேட்ஸ்மேன்கள் இந்தியாவிலேயே ஸ்பின் பவுலிங்கில் தடுமாற காரணம் இந்தியாவில் உள்ள பிட்ச்கள் அஸ்வினுக்கு ஏற்றது போல மாற்றி அமைக்கப்படுவது தான். நம்ப முடியவில்லை என்றால் அஸ்வின் இந்தியாவில் எடுத்த விக்கெட்களையும், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் எடுத்த விக்கெட்களையும் பாருங்கள்" என கூறினார்.
இந்த முதல் பதிவை கண்ட ரசிகர்கள் சிலர், அஸ்வினுக்கு ஆதரவாக பேசத் துவங்கினர். அவர்கள் அனைவருக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் அஸ்வினை பற்றி பல தகவல்களை கொட்டத் துவங்கினார் சிவராமகிருஷ்ணன். அதில் தான் அந்த அதிர்ச்சி தகவல் ஒன்றை கூறினார்.

"இந்தியாவில் சேதப்படுத்தப்பட்ட பிட்ச்களில் முட்டாள் கூட விக்கெட் எடுப்பான். அஸ்வின் போட்டிகளின் போது விமான நிலையத்தில் இருந்து நேராக மைதானத்திற்கு செல்வார். மைதான ஊழியர்களிடம் பிட்ச்சில் எங்கெங்கே சேதம் செய்ய வேண்டும் என கூறுவார். நானே பலமுறை இதை நேரில் பார்த்து இருக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன்.
"இந்தியாவில் மட்டும் 378 விக்கெட்கள் எடுத்து இருக்கிறார் அஸ்வின். அதனால் தான் இன்னும் அவர் விளையாடிக் கொண்டு இருக்கிறார். காரணம் வேறு யாராலும் அத்தனை விக்கெட் வீழ்த்த முடியவில்லை" என அஸ்வின் சேதம் செய்த பிட்ச்களில் விக்கெட் எடுத்து தான் அணியில் நீடித்து இருக்கிறார் என குற்றம் சுமத்தி இருக்கிறார் சிவராமகிருஷ்ணன்.
மேலும், "உடற்தகுதியே இல்லாத கிரிக்கெட் வீரர். எப்போதும் ஏதாவது சாக்கு போக்கு சொல்லிக் கொண்டே இருப்பார்" என அஸ்வினை சரமாரியாக விமர்சனம் செய்துள்ளார் அவர்.
இதற்கு சில ரசிகர்கள், "பொறாமையில் நீங்கள் இப்படி பேசுகிறீர்கள். வெளிநாட்டில் வேகப் பந்துவீச்சுக்கு சாதகமாக பச்சை புல்வெளி போன்ற பிட்ச்களை தயார் செய்யும் போது இந்தியாவில் அஸ்வின் அப்படி தயார் செய்தால் என்ன?" என கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.