
மீண்டும் சொதப்பிய கோலி
இப்போட்டியில், அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் ஷர்மா, லோகேஷ் ராகுல் களமிறங்கினர். முதல் ஓவரை ஆண்டர்சன் வீசினார். ஆனால், எதிர்பாராதவிதமாக லார்ட்ஸ் டெஸ்ட்டில் சதம் விளாசிய லோகேஷ் ராகுல், முதல் ஓவரிலேயே ஆண்டர்சன் ஓவரில் ரன் ஏதும் எடுக்காமல் கேட்ச் ஆகி வெளியேறினார். இதனால், புஜாரா 2வது ஓவரிலேயே களமிறங்கினார். ஆனால், ஒன் டவுன் இறங்கி 9 பந்துகளை சந்தித்த புஜாரா, ஒரேயொரு ரன் மட்டும் எடுத்து அவுட்டானார். ஜேம்ஸ் ஆண்டர்சனின் அவுட் ஸ்விங்கில் புஜாரா கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதன் பிறகு, கேப்டன் விராட் கோலி 17 பந்துகளை சந்தித்து 7 ரன்கள் மட்டும் எடுத்து, ஆண்டர்சனின் லைன் அன்ட் லெந்த் பந்தில் கீப்பர் கேட்ச் ஆகி வெளியேறினார். இந்த விக்கெட்டோடு சேர்த்து, டெஸ்ட் போட்டிகளில் ஆண்டர்சனிடம் 7வது முறையாக அவுட்டாகி வெளியேறினார் விராட் கோலி.

இங்கிலாந்து அபார தொடக்கம்
சர்வதேச கிரிக்கெட்டில் 3 இலக்க ரன்களை எட்ட முடியாமல்.. அதாவது சதம் அடிக்க முடியாமல், விராட் கோலி தொடர்ச்சியாக விளையாடும் 50வது போட்டி இதுவாகும். கடந்த இரண்டு ஆண்டு காலமாக 18 டெஸ்ட், 15 ஒருநாள் மற்றும் 17 டி20 போட்டிகளில் விளையாடியிருக்கும் கோலி, ஒரு சதம் கூட அடிக்கவில்லை. மொத்தமாக 50 போட்டிகளில் அவர் ஒரு சதம் கூட அடிக்காமல் விளையாடி வருகிறார். பிறகு, ரஹானேவும் உணவு இடைவேளைக்கு முன்பே அவுட்டாகி வெளியேறினார். ஓலே ராபின்சனின் துல்லியமான லைன் அன்ட் லெந்த் பந்தில், ரஹானே கீப்பர் கேட்ச் ஆகி வெளியேறினார். 54 பந்துகளை சந்தித்த ரஹானே 3 பவுண்டரிகளுடன் 18 ரன்கள் எடுத்து அவுட்டானார். பிறகு ரோஹித் 19, ரிஷப் பண்ட் 2, ஜடேஜா 4 என்று அடுத்தடுத்து பேட்ஸ்மேன்கள் வெளியேற இந்திய அணி 78 ரன்களில் சுருண்டது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து, நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில், விக்கெட் இழப்பின்று 120 ரன்கள் எடுத்திருந்தது. இங்கிலாந்து ஓப்பனர்கள் ரோரி பர்ன்ஸ், ஹமீத் படேல் ஆகிய இருவரும் எந்தவித சிரமமும் இன்றி இந்திய வேகப்பந்துவீச்சை எதிர்கொண்டனர். பர்ன்ஸ் 52 ரன்களும், ஹமீத் 60 ரன்களும் அடுத்து களத்தில் இருந்தனர்.

கோலி அதிர்ச்சி
இந்நிலையில், நேற்று இங்கிலாந்து பேட்டிங் செய்த போது பவுண்டரி அருகே ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த சிராஜ் மீது பார்வையாளர்கள் சிலர் பந்தை தூக்கி எறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக நடந்ததை போட்டி முடிந்த பிறகு விவரித்த விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், "ரசிகர்கள் பகுதியிலிருந்து யாரோ சிராஜ் மீது பந்தை வீசி எறிந்தனர். அதனால் கோலி கடும் ஏமாற்றமடைந்தார். அதிருப்தி அடைந்தார். ரசிகர்கள் எங்களை நோக்கி என்ன வேண்டுமானாலும் கத்தலாம், வீரர்களை நோக்கி எது வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் கண்டதையும் கொண்டு எறியக்கூடாது. இது கிரிக்கெட்டுக்கு அழகல்ல" என்று தெரிவித்துள்ளார்.

ரிஷப் பண்ட்
ஏற்கனவே, ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரில், நிறவெறி தாக்குதலை சந்தித்த முகமது சிராஜ், இம்முறை இங்கிலாந்தில் மீண்டும் தாக்கப்பட்டுள்ளார். இம்முறை அவர் மீதே நேரடியாக பொருளை (பந்து) வீசி எறிந்திருக்கின்றனர். லார்ட்ஸ் டெஸ்டின் போதும் ரசிகர்கள் சில பொருட்களை விட்டெறிந்தனர். அவை, கே.எல்.ராகுல் நின்று கொண்டிருந்த இடத்துக்கு அருகில் விழுந்தன. அப்போதே கேப்டன் விராட் கோலி இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், சிராஜ் மீது நேரடி தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. நிச்சயம் இந்த விஷயத்தை, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கவனத்துக்கு பிசிசிஐ கொண்டுச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications