
முன்னிலை
முதல் இன்னிங்ஸில் இரு அணிகளும் சமபலத்துடன் இருந்த போதும், 2வது இன்னிங்ஸில் பும்ரா - முகமது ஷமி ஜோடி இணைந்து சேர்த்த 89 ரன்கள் ஒட்டுமொத்த ஆட்டத்தையும் இங்கிலாந்துக்கு எதிராக திருப்பியது. இதுவே இந்தியாவின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில், இந்தியா 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

3வது டெஸ்ட் போட்டி
இந்நிலையில் 3வது டெஸ்ட் போட்டியின் மீது ரசிகர்களின் கவனம் திரும்பியுள்ளது. இந்த டெஸ்ட் போட்டி ஹெட்டிங்லி மைதானத்தில் நாளை தொடங்கவுள்ளது. இந்த போட்டிக்கான பிட்ச் எப்படி தயார் செய்யப்பட்டுள்ளது, அதன் காரணமாக ஆட்டம் எவ்வளவு சுவாரஸ்யமடையும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

பிட்ச் நிலைமை
ஹெட்டிங்லி பிட்ச்-ம் வழக்கம் போல இங்கிலாந்து அணிக்கு ஏற்றவாறு வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் என்னதான் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக பிட்ச்-ஐ தயார் செய்தாலும், வானிலை இந்திய அணிக்கு கைக்கொடுத்துள்ளது.

வானிலை அறிக்கை
3வது டெஸ்ட் போட்டிக்கான வானிலை அறிக்கை சமீபத்தில் வெளியானது. அதன்படி ஆட்டத்தின் முதள் நாள் வானம் தெளிவாக இருக்கும், நல்ல வெயில் அடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இடை நாட்களான 2 மற்றும் 3வது நாளில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதன் பிறகு மீண்டும் 4 மற்றும் 5வது நாளில் வெயில் இருக்கும் எனத் தெரிகிறது. பிட்ச்-ல் ஈரப்பதம் எந்தளவுக்கு இருக்கிறதோ, அந்த அளவிற்கு வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும். வெயில் அடிக்கும் பட்சத்தில், அது சுழற்பந்துவீச்சுக்கு ஏற்றவாறு மாறும்.

இந்தியாவின் பவுலிங் திட்டம்
இந்திய அணி தற்போது வரை 4 வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் ஒரு ஸ்பின்னருடன் பவுலிங் திட்டம் அமைத்து வந்தது. அதிலும் குறிப்பாக முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ரவிச்சந்திரன் அஸ்வின் ஏன் சேர்க்கப்படவில்லை என்ற விவாதம் மீண்டும் சூடுபிடித்தது. ஆனால் இந்த முறை ஆட்டத்தின் 3 நாட்களும் ஸ்பின்னர்களின் பங்களிப்பு வேண்டும் என்பதால், 3 வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் 2 ஸ்பின்னருடன் களமிறங்க கேப்டன் கோலி திட்டமிடுவார் என தெரிகிறது. இஷாந்த் சர்மா உட்காரவைக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications











