பேசாம இவங்கள ஐ.பி.எலில் சேர்த்துக்குங்க,,! 18 பந்துகளில் அரைசதம்.. கடைசி ஓவரில் 8 ரன் அடிக்கவிடாத லீ
அல் அமீராத்: லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியின் கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய மகராஜ் அணியும், உலக ஜியன்ட்ஸ் அணியும் மோதின.
இந்தப் போட்டியில் வென்றால் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பு இந்திய மகராஜ் அணிக்கு இருந்தது.
இதில் டாஸ் வென்ற இந்திய மகராஜ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. உலக ஜியண்ட்ஸ் அணியில் தொடக்க வீரராக பீட்டர்சன், மஸ்டர்ட் களமிறங்கினர்.

கிப்ஸ் அதிரடி
பீட்டர்சன் 11 ரன்களில் ஆட்டமிழக்க, மஸ்டர்ட் 33 பந்துகளில் 57 ரன்கள் அடித்து அதிரடியை காட்டினார்.இதன் பின்னர் களமிறங்கிய தென்னாப்பிரிக்க வீரர் கிப்ஸ், 7 சிக்சர்கள், 7 பவுண்டரிகளை விளாசி 46 பந்துகளில் 89 ரன்கள் குவித்தார்.

228 ரன்கள் குவிப்பு
இறுதியில் கேவின் ஓ பிரைன் 34 ரன்களும், ஆல்பி மார்கல் 16 ரன்களும், ஜான்டி ரூட்ஸ் 20 ரன்களும் அடிக்க, உலக ஜியன்ட்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் குவித்தது. இந்திய பந்துவீச்சாளர்கள் தரப்பில் முனாஃப் பட்டேல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்தியா அதிரடி
229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வசிம் ஜாபர் 4 ரன்களிலும்,பத்ரிநாத் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து ஜோடி சேர்ந்த நமன் ஓஜா, யூசுப் பதான் ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். யூசுப் பதான் 5 சிக்சர்களை விளாசி 22 பந்துகளில் 45 ரன்கள் குவித்தார்.

பிரட்லீ அசத்தல்
சிறப்பாக விளையாடிய நமன் ஓஜா 51 பந்துகளில் 95 ரன்கள் விளாசினார். இதில் 7 சிக்சர்கள் அடங்கும். இறுதியில் இர்பான் பதான் 18 பந்துகளில் அரைசதம் விளாச, கடைசி ஓவரில் இந்திய மகராஜ் வெற்றிக்கு 8 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் பிரட் லீ, தனது அசுர வேக பந்தவீச்சால் 2 ரன்கள் மட்டுமே விட்டு கொடுக்க உலக அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் நாளை இறுதி போட்டியில் ஆசிய லையன்ஸ் மற்றும் உலக ஜியன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.


Click it and Unblock the Notifications