மும்பை : லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் டி20 தொடரில் பங்கேற்ற கிறிஸ் கெயில் பேட்டிங்கின் போது அடித்த ஒரு ஷாட்டில் அவரது பேட் உடைந்து தொங்கியது.
அதை கண்ட ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்தனர். பொதுவாக கிரிக்கெட் போட்டிகளின் இடையே பேட் உடைந்து தெறித்த சம்பவங்கள் நிறைய நடந்துள்ளன. ஆனால், முதல் முறையாக கிறிஸ் கெயிலின் பேட் உடைந்து தொங்கியது.
லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் டி20 தொடர் தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. அதில் பில்வாரா கிங்ஸ் - குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் இடையே நடந்த டி20 போட்டியில் கிறிஸ் கெயில் இடம் பெற்று இருந்த குஜராத் ஜெயன்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

கிறிஸ் கெயில் வழக்கம் போல துவக்க வீரராக களமிறங்கினார். அவருடன் துவக்க வீரராக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் ஜாம்பவான் ஜாக்கஸ் காலிஸ் களமிறங்கி ஆடினார். கெயில் செய்த சொதப்பலால் காலிஸ் 7 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
அதன் பின் தன் அதிரடி வேகத்தை கூட்டிய கிறிஸ் கெயில் 27 பந்துகளில் 52 ரன்கள் குவித்தார். அவர் 38 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் ஆறாவது ஓவரை சந்தித்த போது தான் பேட் உடைந்த சம்பவம் நடந்தது. இங்கிலாந்து வீரர் ரியான் சைடுபாட்டம் வீசிய அந்த ஓவரில் கிறிஸ் கெயில் நான்காவது பந்தை ஃபோர் அடிக்க முயன்றார்.
அப்போது பந்தை அவர் அடித்த போது பேட் கைப்பிடி உடைந்தது. ஆனாலும், அந்தப் பகுதியில் பேட் ஒட்டப்பட்டு இருக்கும் என்பதால் முழுமையாக உடையாமல் பேட் கீழே தொங்கியது. ஒரு நொடியில் நடந்த இந்த சம்பவத்தை கண்டு மைதானத்தில் நேரில் போட்டியை கண்ட ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்தனர்.
இந்தப் போட்டியில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 172 ரன்கள் குவித்தது. கிறிஸ் கெயில் அடித்த 52 ரன்களே அந்த அணியில் அதிகபட்ச தனி நபர் ஸ்கோர் ஆகும். இந்த தொடரில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாக பார்த்திவ் பட்டேல் மற்றும் பில்வாரா கிங்ஸ் அணியின் கேப்டனாக இர்பான் பதான் இடம் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.