சூரத் : முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்குபெறும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் ஸ்ரீசாந்த் தன் பழைய சீண்டல் வேலைகளை செய்ய, பேட்டிங் செய்த கவுதம் கம்பீர் கொந்தளித்து அதிரடி ஆட்டத்தில் இறங்கி பதிலடி கொடுத்தார்.
முன்னாள் கிரிக்கெட் வீரர்களை வைத்து ஐபிஎல் தொடர் போன்ற சிறிய அளவிலான டி20 தொடர் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் என்ற பெயரில் நடந்து வருகிறது.
அதில் இந்தியா கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக கவுதம் கம்பீரும், குஜராத் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாக பார்த்திவ் பட்டேலும் உள்ளனர். இந்த இரு அணிகளுக்கு இடையேயான போட்டி சூரத் நகரில் நடைபெற்றது. இந்தியா கேபிடல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

கவுதம் கம்பீர் துவக்க வீரராக இறங்கினார். இரண்டாவது ஓவரை குஜராத் அணியில் இடம் பெற்று இருந்த முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் வீசினார். அவர் சர்வதேச கிரிக்கெட்டில் ஆடிய காலங்களிலேயே எதிரணி வீரர்களை சீண்டும் குணம் கொண்டவர். அதே வேலையை கவுதம் கம்பீரிடம் செய்தார்.
இரண்டாவது ஓவரின் முதல் பந்தை வைடாக வீசினார் ஸ்ரீசாந்த். அப்படி வீசினால் கம்பீர் அதை அடிக்க முற்பட்டு கேட்ச் கொடுப்பார் என அவர் எதிர்பார்த்தார். ஆனால், அது நடக்கவில்லை. இதை அடுத்து ஸ்ரீசாந்த், கம்பீரை முறைத்துப் பார்த்தார். அப்போது கடுப்பான கம்பீர் அடுத்த இரண்டு பந்துகளிலும் ஒரு சிக்ஸ், ஒரு ஃபோர் அடித்தார். அதனால், ஸ்ரீசாந்த் ஏதோ சொல்ல, கம்பீர் திருப்பி அவரை வசை பாடினார்.
இந்த சம்பவத்துக்கு பிறகு மீண்டும் 6வது ஓவரை ஸ்ரீசாந்த் வீசி முடித்த போது கம்பீர் - ஸ்ரீசாந்த் இடையே மோதல் வெடித்தது. அம்பயர், மற்ற வீரர்கள் அவர்களை தடுத்தனர். இந்தப் போட்டியில் கம்பீர் 30 பந்துகளில் 51 ரன்கள் குவித்தார். இந்தியா கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 223 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய குஜராத் ஜெயன்ட்ஸ் அணி 211 ரன்கள் மட்டுமே எடுத்து 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.