சூரத் : லெஜண்ட்ஸ் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் கவுதம் கம்பீர் - ஸ்ரீசாந்த் இடையே பெரும் மோதல் வெடித்து சர்ச்சையாக மாறி உள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கும் இந்த கிரிக்கெட் தொடரில் இந்தியா கேபிடல்ஸ் - குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகளுக்கு இடையே எலிமினேட்டர் போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டியில் இந்தியா கேபிடல்ஸ் அணியின் கேப்டன் கவுதம் கம்பீர் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது ஸ்ரீசாந்த் அவரைப் பார்த்து முறைத்தார். அதற்கு பதிலடியாக அதே ஓவரில் ஒரு சிக்ஸ், ஒரு ஃபோர் அடித்தார் கம்பீர்.

அதன் பின் ஆறாவது ஓவரை ஸ்ரீசாந்த் வீசி முடித்த பின் கவுதம் கம்பீர் அவரைப் பார்த்து ஏதோ சொல்ல பெரும் மோதல் வெடித்தது. பின் அம்பயர், குஜராத் அணி கேப்டன் பார்த்திவ் பட்டேல் ஆகியோர் சமாதானம் செய்தனர். அந்த இன்னிங்க்ஸ் முடிந்த உடன் ஸ்ரீசாந்த் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார்.
அதில் கவுதம் கம்பீர் தன்னைப் பார்த்து மோசமாக பேசினார் எனவும், அவர் இந்திய அணிக்காக ஆடும் போது கூட அனைவருடனும் மோதல் போக்கை கடைபிடித்தார் எனவும் கூறினார். அணியில் மூத்த வீரராக இருந்த வீரேந்தர் சேவாக் பேச்சை கேட்க மாட்டார். அதே போல விராட் கோலி குறித்து சமீபத்தில் வர்ணனையில் கேள்வி எழுப்பிய போது அதற்கு இவர் பதில் அளிக்கவில்லை என நடந்த விஷயத்தை விட்டுவிட்டு வேறு ஏதோ விஷயத்தை கூறி இருந்தார் ஸ்ரீசாந்த். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கம்பீர், சிலர் விளம்பரத்துக்காக செயல்படும் போது சிரிக்க வேண்டும் எனக் கூறி தான் சிரிப்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார்.
இந்த விஷயம் தேசிய ஊடகங்களில் பரவிய நிலையில், ஸ்ரீசாந்த் உண்மையில் என்ன வார்த்தை சொல்லி கம்பீர் தன்னை திட்டினார் என கூறி இருக்கிறார். தன்னை "மேட்ச் பிக்ஸிங் செய்பவர்" என கம்பீர் திட்டியதாகவும், அத்துடன் ஆங்கிலத்தில் "எஃப்" (F)-இல் தொடங்கும் கெட்ட வார்த்தையையும் சேர்த்து திட்டியதாகவும், தடுக்க வந்த அம்பயரையும் அதே வார்த்தை சொல்லி அவர் திட்டினார் எனவும் கூறி இருக்கிறார். ஸ்ரீசாந்த் ஐபிஎல் தொடரில் மேட்ச் பிக்ஸிங் செய்தார் என அவர் மீது வழக்கு பதியப்பட்ட போதும் நீதிமன்றத்தில் ஆதாரப்பூர்வமாக அந்த குற்றச்சாட்டு நிரூபணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.