லண்டன்: இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டன், தனது அணியின் தலைமை பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தை கடுமையாக சாடியுள்ளார். தனது பேட்டிங் ஃபார்ம் சரியில்லை என உதவி கேட்ட போது பயிற்சியாளர் மெக்கல்லம் அலட்சியப்படுத்தி அனுப்பியதாக குமுறி இருக்கிறார். தற்போது 2026 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக 13 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ள அவர், இந்தியாவுக்கு புறப்படுவதற்கு முன்பாக இந்த பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குப் பிறகு லியாம் லிவிங்ஸ்டன் இங்கிலாந்து அணிக்காக விளையாடவில்லை. தன்னை அணியிலிருந்து நீக்கியது குறித்தோ அல்லது தனது எதிர்காலம் குறித்தோ இங்கிலாந்து அணி நிர்வாகம் எந்தவித முறையான தகவலும் தெரிவிக்கவில்லை என்றும், இது தன்னை அவமதிக்கும் செயல் என்றும் அவர் வேதனை தெரிவித்துள்ளார். சமீபத்தில் இங்கிலாந்து விளையாடிய டி20 உலகக்கோப்பை அணியில் இடம்பெறாதது தனக்கு எந்தவித வருத்தத்தையும் அளிக்கவில்லை என்று லிவிங்ஸ்டன் வெளிப்படையாகக் கூறியுள்ளார்.

இங்கிலாந்து அணியிலிருந்து தான் நீக்கப்பட்டது குறித்து மெக்கல்லமுடன் தொலைபேசியில் பேசியபோது அந்த அழைப்பு ஒரு நிமிடம் கூட நீடிக்கவில்லை எனவும், அணியில் வேறு ஒருவரை முயற்சிக்க விரும்புவதாக மட்டுமே தன்னிடம் கூறப்பட்டதாக அவர் தெரிவித்தார். அதேபோல், தனது ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாதது குறித்து இங்கிலாந்து வாரிய நிர்வாக இயக்குனர் ராப் கீயிடம் கேட்டபோது, உன்னிடம் பேசுவதை விட தனக்கு 100 முக்கியமான வேலைகள் இருப்பதாக கூறி தன்னை அவமதித்ததாக லிவிங்ஸ்டன் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். கேப்டன் ஹாரி புரூக் வெறும் குறுஞ்செய்தி மட்டுமே அனுப்பியதாகவும் வருத்தம் தெரிவித்தார்.
மெக்கல்லம் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு 6 ஒருநாள் போட்டிகளில் 88 ரன்கள் மட்டுமே எடுத்து லிவிங்ஸ்டன் திணறினார். இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரிலும் இங்கிலாந்து அணி 1-4 என படுதோல்வி அடைந்தது. இந்த கடினமான காலகட்டத்தில் அணி நிர்வாகத்திடம் உதவி கேட்டபோது, நீ எல்லாவற்றையும் அதிகமாக மனதில் போட்டுக் கொள்கிறாய், கொஞ்சம் அமைதியாக இரு என்று கூறி அவர்கள் அலட்சியப்படுத்தினர். நாட்டுக்காக விளையாட ஒரு வீரரும் அவரது குடும்பமும் செய்த தியாகங்களை அவர்கள் கொஞ்சமும் மதிக்கவில்லை என லிவிங்ஸ்டன் கொந்தளித்துள்ளார்.

இங்கிலாந்து அணி நிர்வாகம் இத்தனை மோசமாக நடந்து கொண்ட நிலையில், 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்துக்கு முன் தன்னை நீக்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கூட அதை சிறப்பாக கையாண்டதாக கூறி இருக்கிறார். ஆர்சிபி அணியின் பயிற்சியாளர் ஆண்டி பிளவர் மற்றும் நிர்வாகி ஒருவர் தனித்தனியாக தன்னிடம் நீண்ட நேரம் பேசி, "ஏன் வெளியேற்றுகிறோம்?" என விளக்கம் அளித்ததாகவும், தனது கேள்விகளுக்கு பதில் அளித்ததாகவும் குறிப்பிட்டு இருக்கிறார் லியாம் லிவிங்ஸ்டன்.
