லண்டன்: இங்கிலாந்து அணியின் பேர்ஸ்டோவை ஆஸ்திரேலியா அணியின் அலெக்ஸ் கேரி எப்படி ரன் அவுட் செய்தாரோ, அதேபோல் இரு நாட்களுக்கு முன் லபுஷேனை பேர்ஸ்டோவ் ரன் அவுட் செய்ய முயன்ற வீடியோவை வெளியிட்டு ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது ஆஷஸ் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதுபக்கம் இருக்க இங்கிலாந்து அணியின் பேர்ஸ்டோவை ரன் அவுட் செய்த அலெக்ஸ் கேரியின் செயல் கிரிக்கெட்டின் புனிதத்தை களங்கப்படுத்திவிட்டதாக இங்கிலாந்து ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

ஆஸ்திரேலிய அணியால் நிர்ணயிக்கப்பட்ட 371 ரன்கள் என்ற இலக்கை பென் ஸ்டோக்ஸ் உடன் இணைந்து பேர்ஸ்டோவ் விரட்டி வந்தார். அப்போது 51வது ஓவரின் கடைசி பந்தில் பேர்ஸ்டோவுக்கு ஷார்ட் பால் வீசப்பட்டது. அதனை பேர்ஸ்டோவ் அடிக்க முயற்சிக்காமல் குனிந்து கொண்டார். இதையடுத்து பந்து விக்கெட் கீப்பரிடம் சென்றபோது, அவர் கிரீசை விட்டு வெளியே வந்தார்.
இதை பார்த்த அலெக்ஸ் கேரி பந்தை ஸ்டம்பில் அடித்து ரன் அவுட் செய்தார். இதனையடுத்து ஆஸ்திரேலிய வீரர்கள் நடுவரிடம் அவுட் என்று முறையிட, முடிவு மூன்றாம் நடுவரிடம் கொண்டு செல்லப்பட்டது. இதன்பின்னர் மூன்றாம் நடுவர், அவுட் என்று முடிவை அறிவிக்க, cheaters என்ற குரல்கள் இங்கிலாந்து ரசிகர்களிடையே எழுந்தது. இதையடுத்து ஆஸ்திரேலிய வீரர்களை இங்கிலாந்து ரசிகர்கள் மோசமாக குரல்கள் எழுப்பி தொடங்கினர்.
ஆனால் ஆஸ்திரேலிய வீரர்களோ விதிகளின்படியே செயல்பட்டு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர். திடீரென கிரிக்கெட்டின் புனிதத்தை களங்கப்படுத்தியதாக இங்கிலாந்து மீடியாக்களும் எழுதி வருகின்றன. ஆனால் விதிகளின்படி விளையாடுவதே கிரிக்கெட் புனிதம் என்று ஆஸ்திரேலிய ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் 3ஆம் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் பேர்ஸ்டோவும் ஆஸ்திரேலிய அணியின் லபுஷேனை ரன் அவுட் செய்ய முயன்ற வீடியோ வெளியாகியுள்ளது. ஆண்டர்சன் வீசிய பந்து லபுஷேனை கடந்து பேர்ஸ்டோவிடம் செல்ல, உடனடியாக பந்தை பிடித்த பேர்ஸ்டோவ் ஸ்டம்புகளை நோக்கி வீசியெறிந்தார். ஆனால் லபுஷேன் கிரீஸை விட்டு வெளியேறாமல் விதிகளின்படி கிரீஸிற்குள்ளேயே இருந்துள்ளார். இதனால் இங்கிலாந்து ரசிகர்களுக்கு ஆஸ்திரேலிய அணி ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.