மும்பை: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் பிறந்தநாளன்று, ரோகித் சர்மாவை மக்களின் கேப்டன் என்று சுனில் கவாஸ்கர் பேசியிருக்கும் சம்பவம் சிஎஸ்கே ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணிக்காக 3 வகையான ஐசிசி கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் தோனி தான்.
அதன்பின் டி20 உலகக்கோப்பையை ரோகித் சர்மா வென்றிருக்கிறார். இந்த டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தியதோடு, முக்கியமான போட்டிகளில் ரோகித் சர்மாவின் பேட்டிங் மிரட்டலாகவே அமைந்தது. 17 ஆண்டுகளுக்கு பின் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வென்றுள்ளது.

இந்த நிலையில் கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் பேசுகையில், டி20 உலகக்கோப்பையை கேப்டனாக வென்றதன் மூலமாக கபில் தேவ், தோனி உள்ளிட்ட ஜாம்பவான்கள் பட்டியலில் ரோகித் சர்மாவும் இணைந்துள்ளார். அவர்கள் இருவரையும் போலவே, ரோகித் சர்மாவும் மக்களின் கேப்டனாக கொண்டாடப்படுகிறார். ரோகித் சர்மாவை இந்திய அணி வீரர்கள் மட்டுமல்லாமல், இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் விரும்புகிறார்கள்.
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ரோகித் சர்மாவின் ஐகானிக் கேப்டன்சி ஸ்டைல் மற்றும் யுக்திகளை ரசிக்கிறார்கள். ஆட்டத்தின் போக்கை சரியான நேரத்தில் கணித்து திட்டங்களை உருவாக்குகிறார். இதன் காரணமாக ரோகித் சர்மாவின் கள முடிவுகள் பலருக்கும் ஆச்சரியத்தை கொடுக்கிறது. அதேபோல் அந்த முடிவுகளால் ஆட்டத்தின் போக்கு மாறும் போது மக்கள் கொண்டாடுகிறார்கள்.
இந்திய அணிக்காக முன் நின்று போராடுவதோடு, சொந்த சாதனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அணிக்கு தேவையானதை செய்கிறார். இதுபோன்ற கேப்டன்களை பெறுவதற்காக இந்தியா புண்ணியம் செய்திருக்க வேண்டும். அதேபோல் ராகுல் டிராவிட்டின் ரோல் மிக முக்கியமானது. ரோகித் மற்றும் ராகுல் டிராவிட் இருவரும் சரியான கூட்டணியாக உள்ளதாக பாராட்டியுள்ளார்.
இதுவரை மும்பை நகரில் இருந்து ஏராளமான வீரர்கள் உச்சத்திற்கு வந்திருந்தாலும், எந்த வீரரும் கேப்டனாக பெரிய சாதனைகளை படைக்கவில்லை. அந்த வகையில் மும்பையில் இருந்து வந்த ரோகித் சர்மா தான் கேப்டனாக ஐசிசி கோப்பையை வென்று சாதித்துள்ளார். இதனால் ரோகித் சர்மாவுக்கு ஆதரவாக மும்பை லாபி செயல்படுவதாக சில விமர்சனங்கள் எழுந்துள்ளன.