மும்பை : ஐசிசி கோப்பையை இந்திய அணி கடந்த 10 ஆண்டுகளாக ஒரு முறை கூட வெல்ல முடியாமல் தடுமாறி வருகிறது. இந்திய அணி பேட்டிங், பந்துவீச்சு என அனைத்திலும் பலமாக இருந்தும் இந்திய அணியால் ஏன் ஐசிசி கோப்பையை வெல்ல முடிய வில்லை என ரசிகர்கள் தடுமாறி வந்தனர்.
ஆனால் இது அனைத்துக்கும் ஒரு காரணம் இருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா. உலகக் கோப்பையை வெல்லப் போகும் அணி என்பது ஒரு பெரிய மாளிகையை தாங்கி நிற்கும் தூண்கள் போன்றதாகும்.

இதில் ஒரு தூண் இல்லை என்றாலும் அந்த மாளிகை இடிந்து விடும். அப்படி தான் இந்திய அணிக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக ஒரு ஐசிசி கோப்பை கூட கிடைக்காமல் போனது. கடந்த 2019 ஆம் ஆண்டு ஐசிசி உலக கோப்பையில் இந்திய அணி 7 போட்டிகளில் வெற்றி அடைந்தும் கோப்பையை வெல்ல முடியவில்லை. இதற்குக் காரணம் 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இந்திய அணியின் நட்சத்திர வீரராக விளங்கிய ஷிகர் தவான் காயம் காரணமாக பாதியில் விலகியதுதான்.
இதனால் கே எல் ராகுல் தொடக்க வீரராக வந்தார். 2022 டி20 உலக கோப்பை தொடரின் போது அதிரடி ஆல்ரவுண்டர் தீபக் சாகர் இடம்பெறவில்லை. இதனால் இந்திய அணியின் பேலன்ஸ் மிகவும் பாதிக்கப்பட்டது. இதேபோன்று அதே டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் அதிரடி ஆல் கவுண்டர் ஜடேஜாவும் விளையாடவில்லை. இதன் காரணமாக இந்திய அணி கிடைத்த வீரர்களை பயன்படுத்திக்கொண்டு அரையிறுதி சுற்று வரை சென்றது.
இதேபோன்று 2023 ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இந்திய அணி தங்களுடைய நான்கு முக்கிய வீரர்கள் இல்லாமல் களம் இறங்கியது. கே எல் ராகுல், ரிஷப் பந்த், பும்ரா, ஸ்ரேயாஸ் ஐயர் என்ற நான்கு வீரர்கள் காயம் காரணமாக அந்த போட்டியில் விளையாடவில்லை. இதனால் இந்தியாவுக்கு கோப்பை வெல்லும் வாய்ப்பு பறிபோனது.
இதேபோன்று தற்போது 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியிலிருந்து ஹர்திக் பாண்டியா விலகி இருப்பதும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. இப்படி முக்கிய வீரர்கள் பல முக்கிய கட்டத்தில் விலகுவதால் தான் இந்திய அணியால் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியவில்லை. எனினும் இந்த தொடரில் ஹர்திக் பாண்டியா இல்லை என்றாலும் அவருக்கு மாற்றாக களமிறங்கக்கூடிய வீரர்கள் சிறப்பாக விளையாடி இந்தியாவின் கனவை நிறைவேற்றுவார்கள் என்பதை எதிர்பார்க்கலாம்.