உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அணி மீண்டும் choke ஆகி 191 ரன்களில் ஆட்டம் இழந்தது. பேட்டிங்கிற்கு சாதகமான மைதானத்தில் இந்தியாவால் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்ய பணிக்கப்பட்டது.
தொடக்கத்திலேயே பாகிஸ்தான் வீரர்கள் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.இதனால் இன்றைய ஆட்டத்தில் 350 ரன்களுக்கு மேல் செல்லும் ரெடியாகிக்கிடா கைப்புள்ள என்றது போல் இந்திய ரசிகர்கள் பிபி மாத்திரைகளை எல்லாம் தயார் செய்து வைத்துக்கொண்டனர்.

ஆனால் ரோகித் சர்மாவின் அபார கேப்டன்சியால் பாகிஸ்தான் அணியின் ரன் வேகம் குறைக்கப்பட்டது. மேலும் ரோகித் சர்மா அபாரமாக பந்துவீச்சை சுழற்சி முறையில் மாற்றினார்.இந்த நிலையில் பாகிஸ்தான் அணி 73 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. பாபர் அச மற்றும் முகமது ரிஸ்வான் ஜோடி பொறுப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.
ஒரு கட்டத்தில் 155 ரன்கள் இரண்டு விக்கெட் என்ற நிலையில் இருந்த பாகிஸ்தான் அடுத்த 36 ரன்கள் சேர்ப்பதற்குள் எட்டு விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தனர். இதில் பாகிஸ்தான் என்ன தவறு செய்தது என்பதை தற்போது பார்க்கலாம். அகமதாபாத்தில் அமைக்கப்பட்ட ஆடுகளத்தை தவறாக கணித்த பாகிஸ்தான் 350 ரன்கள் அடிக்க வேண்டும் என்பதால் வேகமாக விளையாட முற்பட்டார்கள்.

இதனால் விக்கெட்டுகளும் அடுத்தடுத்து சென்றது. குறிப்பாக பாகிஸ்தான் கேப்டன் பாபர் அஸாம் அரைசதம் கடந்த நிலையில் அதனை சதமாக மாற்றி இருக்க வேண்டும். ஏன் என்றால் ஒட்டுமொத்த பாகிஸ்தான் அணியும் பாபர் அசாம், முகமது ரிஸ்வானை சுற்றி இயங்கிக் கொண்டிருக்கிறது.ஆனால் அவர்கள் வேகமாக விளையாடுகிறேன் என ஆசைப்பட்டு விக்கெட்டுகளை பறிகொடுக்க தொடங்கினர்.
இதேபோன்று குல்திப் யாதவ் பந்துவீச்சை பாகிஸ்தான் வீரர்கள் கணிக்க தவறி விட்டார்கள். ரன் அடிக்க முற்பட்டு விக்கெட்டுகளை இழந்தனர். இதேபோன்று பாகிஸ்தான் அணியின் நடு வரிசை போதிய அனுபவம் இல்லாமல் இருக்கிறது என்று பல கிரிக்கெட் வல்லுனர்களும் கூறி இருந்தனர். குறிப்பாக சவுத் ஷகீல், இப்திகார் அஹமத் போன்ற வீரர்கள் ஒரு லட்சம் இந்திய ரசிகர்கள் முன் விளையாடும் போது இயற்கையாகவே அவர்களுக்கு கடும் நெருக்கடியும் அழுத்தமும் ஏற்படும்.

இதை யார் சமாளித்து விளையாடுகிறார்களோ அவர்களே வெற்றி பெற முடியும். ஆனால் பாகிஸ்தான் அணியால் இந்த நெருக்கடியை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதிலும் இந்திய வீரர்கள் சரியாக ஸ்டம்பை நோக்கி பந்து வீசினார்கள். இதன் காரணமாக விக்கெட்டுகள் அடுத்தடுத்து கிடைத்தது. தற்போது 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் ரோகித் சர்மா அதிகபட்சமாக 86 ரன்கள் விளாசினார். அவருக்கு ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம் அடித்து துணை நிற்க இந்திய அணி 117 பந்துகள் எஞ்சிய நிலையில் வெற்றி பெற்றது. இது உலககோப்பையில் இந்தியாவுக்கு பாகிஸ்தானுக்கு எதிராக கிடைத்த 8வது வெற்றி ஆகும்.