விசாகப்பட்டினம் : ஐசிசி உலக கோப்பையில் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா அடைந்த தோல்வியின் மூலம் காயம் அடைந்த ரசிகர்களுக்கு மருந்து போடும் விதமாக நேற்றைய முதல் டி20 ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை இந்தியா தோற்கடித்து இருக்கிறது.
அதுவும் சாதாரணமாக அல்ல, இரண்டு மிகப்பெரிய சாதனைகளை இந்தியா படைத்திருக்கிறது. குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் 200 ரன்களுக்கு மேல் துரத்த வேண்டும் என்றாலே அது கடினமாக இருக்கும்.

ஆனால் நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 209 ரன்கள் இலக்காக நிர்ணயித்தும், இந்திய அணி கடைசி பந்தில் அந்த இலக்கை அபாரமாக எட்டி அசத்தி இருக்கிறது. அதுவும் ரோஹித் சர்மா, விராட் கோலி,கே எல் ராகுல்,ஹர்திக் பாண்டியா, பும்ரா ,சமி, முகமது சிராஜ் போன்ற எந்த வீரர்களும் இல்லாமல் சூரிய குமார் யாதவ் தலைமையில் இந்தியா சாதனை படைத்திருக்கிறது.
டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை வெற்றிகரமாக 200 ரன்களுக்கு மேல் சேசிங் செய்த அணி என்ற சாதனையை இந்தியா படைத்திருக்கிறது. இதுவரை இந்திய அணி ஐந்து முறை 200 ரன்களுக்கு மேல் வெற்றிகரமாக டி20 போட்டியில் சேசிங் செய்திருக்கிறது. தென்னாப்பிரிக்கா நான்கு முறையும், பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா தலா மூன்று முறையும் சேசிங் செய்து இந்த பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்கள்.
இதே போன்று 209 ரன்கள் என்ற இலக்கை நேற்று இந்தியா வெற்றிக்கரமாக துரத்தியதன் மூலம் தங்களுடைய தனிப்பட்ட சாதனையை முறியடித்து இருக்கிறது. இதற்கு முன்பு வெஸ்ட் இண்டீஸ் எதிராக 208 ரன்களை இந்தியா வெற்றிகரமாக துரத்தியதே இந்தியாவின் தனிப்பட்ட சாதனையாக இருந்தது. அதனை தற்போது நேற்று இந்தியா முறியடித்து இருக்கிறது.
இதற்கு முன்பு இலங்கைக்கு எதிராக 207 ரன்களும், நியூசிலாந்துக்கு எதிராக 204 ரன்களும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 202 ரன்கள் என்ற இலக்கை வெற்றிகரமாக இந்தியா துரத்தியது சாதனையாக கருதப்பட்டது. இதேபோன்று சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக முறை அரைசதம் அடித்த விக்கெட் கீப்பர் பட்டியலில் தோனி, ரிஷப் பண்ட் ஆகியோரின் சாதனையை இரண்டு முறை அரைசதம் அடித்து இசான் கிஷன் சமன் செய்திருக்கிறார். இதேபோன்று இந்திய வீரர் சூரியகுமார் யாதவ் நேற்று சர்வதேச t20 கிரிக்கெட்டில் 100வது சிக்சரை அடித்து இருக்கிறார்.