மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கிரிக்கெட் ரசிகர்களை கடந்த இரண்டு மாதமாக கட்டி போட்ட நிலையில் தற்போது அது முடிந்தவுடன் ரசிகர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்து வருகிறார்கள். இப்படி தவித்துக் கொண்டிருந்த ரசிகர்களாக நீங்கள் இருந்தால் இந்த செய்தி உங்களுக்காக தான்.
கிரிக்கெட் முடிந்துவிட்டது என்று கவலைப்பட தேவையில்லை. ஏனென்றால் இந்த ஆண்டு முழுவதும் பல்வேறு கிரிக்கெட் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. அது என்னவென்று தற்போது பார்க்கலாம்.

டி20 கிரிக்கெட் போட்டியில் இருந்து தற்போது அனைவரின் கவனமும் டெஸ்ட் போட்டிக்கு திரும்ப இருக்கிறது. காரணம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வரும் 7ஆம் தேதி தொடங்குகிறது. இதில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பங்கேற்கிறது. இது முடிந்தவுடன் பாரம்பரியமிக்க ஆசஸ் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது.இதில் இங்கிலாந்து ஆஸ்திரேலியா ஆகிய ஆணிகள் மோதுகின்றன.
இரண்டு அணிகளும் சம பலத்துடன் இருப்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சம் இருக்காது. உண்மையான கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்த இரண்டு டெஸ்ட் தொடரும் நல்ல பொழுதுபோக்கை தரும். இதேபோன்று ஜூன் மாதத்தில் இந்தியா ஆப்கானிஸ்தான் உடன் டி20 மற்றும் ஒரு நாள் போட்டியில் பங்கேற்கிறது. இதில் ஐபிஎல் தொடரில் சிறந்து விளங்குபவர்கள் எல்லாம் தேர்வு செய்து பிசிசிஐ விளையாட வைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோன்று ஜூலை மாதம் இந்திய அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு இரண்டு டெஸ்ட் மற்றும் ஒரு நாள் டி20 தொடர்களில் இந்தியா விளையாட உள்ளது. அதன் பிறகு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற வாய்ப்பு இருக்கிறது.ஒருவேளை அந்த தொடர் நடைபெறவில்லை என்றால் ஐந்து நாடுகளை வரவழைத்து இந்தியாவில் ஒரு நாள் தொடரை நடத்த பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.
இந்த தொடர் முடிந்த பிறகு ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இந்தியாவில் வந்து ஒரு நாள் போட்டி தொடரில் விளையாடுகிறது. இது முடிந்தவுடன் அக்டோபர் மாதம் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் நடைபெறுகின்றன. இதனால் இந்த ஆண்டு முழுவதுமே கிரிக்கெட் ரசிகர்கள் செமையா என்ஜாய் பண்ணலாம்.