கராச்சி: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புகழ்பெற்ற முன்னாள் வீரர் ஹனீப் முகமது (81) கராச்சியில் காலமானார். சுவாச கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் லிட்டில் மாஸ்டர் என்று வர்ணிக்கப்படுபவர் ஹனீப் முகமது. அவரது திறமைக்கு சமமான பேட்ஸ்மேன்கள் இன்று வரை கூட அந்த அணியில் இல்லை என்று கருதப்படும் ஒரு வீரர் ஆவார்.

இவர் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 1957, 1958-ல் எடுத்த 337 ரன்கள் சாதனையை இதுவரை பாகிஸ்தான் வீரர்கள் யாராலும் முறியடிக்க முடியவில்லை. இந்த சாதனையை 970 நிமிடங்கள் களத்தில் இருந்து நிகழ்த்தியுள்ளார் ஹனீப் முகமது.
1968 ஆம் ஆண்டு ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் என்ற பெயரும் எடுத்து இருந்தார். பாகிஸ்தான் அணிக்காக இவர் 55 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3915 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 12 சதம் அடங்கும்.
இவரது குடும்பமே கிரிக்கெட் குடும்பம் இவரது சகோதரர்கள் முஷ்தக், சாதிக், வாஷர் ஆகிய 3 பேரும் பாகிஸ்தான் அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளனர். இவரது மகன் ஷோயிப் இம்ரான் கான், மியாண்ட் தத் தலைமையில் விளையாடி உள்ளார்.
கடந்த 2013-ல் ஹனீப் முகமதுவுக்கு நுரையீரல் புற்று நோய் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு லண்டனில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக சுவாச கோளாறு உள்ளிட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருந்த ஹனீப் முகமதுவுக்கு கராச்சியில் உள்ள அகாகான் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனிடையே சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது.
முன்னாள் வீரர் ஹனீப் முகமது மறைவிற்கு சச்சின் டெண்டுல்கர், வாஷிம் அக்ரம் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
நின்ற இருதயம் மீண்டும் இயங்கியது:
ஹனீப் முகமது இறந்துவிட்டதாக மருத்துவர்களால் அறிவிக்கப்பட்ட பிறகு 6 நிமிடங்கள் கழித்து மருத்துவ முயற்சியினால் மீண்டும் இருதயம் செயல்பட வைக்கப்பட்டது என தகவல் வெளியாகியது. இது குறித்து அவரது மகன் ஷோயிப் முகமது கூறுகையில், எனது தந்தை உயிருடன் இருக்கிறார். சில தவறான தகவல்களால் எனது தந்தை மரணம் அடைந்ததாக செய்தி வெளியானது.அவரது இதய துடிப்பு 6 நிமிடங்கள் மட்டுமே நின்று இருந்தது என கூறினார்.