
அப்படி சொல்ல மாட்டேன்
இந்நிலையில், இன்று (ஆக.14) மூன்றாம் நாள் ஆட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கேப்டன் ஜோ ரூட் அரைசதம் அடிக்க, ஜானி பேர்ஸ்டோ அவ்வப்போது பவுண்டரிகளை அடித்து வருகிறார். சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில், இந்திய பவுலர்கள் முதல் செஷனில் விக்கெட்டுகளை எடுக்க தடுமாறி வருகின்றனர் எனலாம். இதற்கிடையே, இந்திய விக்கெட் ரிஷப் பண்ட் குறித்து இங்கிலாந்து முன்னாள் வீரர் டேவிட் லாயிட் சிலாகித்துள்ளார். அதாவது, ரிஷப்பை அவர் ஆஸ்திரேலியா முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆடம் கில்கிறிஸ்ட் உடன் ஒப்பிட்டு பேசி வியந்திருக்கிறார். இதுகுறித்து அவர், "இந்திய அணியில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்து ரிஷப் பண்ட் களமிறங்கி இருந்தார். அவர் கிரீஸுக்கு வந்தபோது, இங்கிலாந்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றியது. அப்போது வர்ணனை செய்து கொண்டிருந்த தினேஷ் கார்த்திக் என்னிடம், "ஒரு முன்னாள் பயிற்சியாளராக நீங்கள் ரிஷப் பண்ட்-ஐ இந்த நேரத்தில் நிதானமாக ஆடச் சொல்வீர்களா?' என்று கேட்டார். நான் சொன்னேன், "இல்லை, நான் மாட்டேன். எந்த சூழ்நிலையாக இருந்தாலும், எதிரணியை அட்டாக் செய்வதே ரிஷப்பின் பாணி. அவர் எனக்கு ஆடம் கில்கிறிஸ்டை நினைவூட்டுகிறார்" என்று தெரிவித்துள்ளார்.

அரிதான விஷயம்
இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இரண்டாவது நாளின் முதல் இரு ஓவர்களில் ரஹானே மற்றும் லோகேஷ் ராகுல் விக்கெட்டுகளை இழந்த போதும், ரிஷப் பண்ட், இங்கிலாந்து பவுலர்களான ஓலே ராபின்சன் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓவர்களை இறங்கி வந்து விளையாடிக் கொண்டிருந்தார். 58 பந்துகளில் 5 பவுண்டரிகளின் உதவியுடன் 37 ரன்கள் அடித்தார். அதுவும், ராபின்சன் ஓவரை தைரியமாக இறங்கி வந்து விளாசியது எல்லாம் வேற லெவல். டெஸ்ட் கிரிக்கெட்டில் நாம் மிக அரிதாக பார்க்கக் கூடிய விஷயங்கள் இவை.

குவாலிட்டி
ஆடம் கில்கிறிஸ்ட் அளவுக்கெல்லாம் வர வேண்டியதில்லை. அட்லீஸ்ட், அவரது திறமையில் பாதியை ரீச் செய்துவிட்டாலே, ரிஷப் 'தி கிரேட்' ஆகிவிடுவார். ஆனால், ரிஷப்பிற்கு என்று தனி குவாலிட்டி உண்டு. பயமில்லாமல் ஆடுவது. உலகின் எப்பேர்ப்பட்ட பவுலராக இருந்தாலும், அவர் எத்தனை விக்கெட்டுகள் வீழ்த்தியவராக இருந்தாலும், அந்த போட்டியில், தான் களமிறங்குவதற்கு முன்பு, அந்த பவுலர் எத்தனை விக்கெட் வீழ்த்தி இருந்தாலும், அதைப்பற்றியெல்லாம் துளியும் கவலைப்படாத, பயம் கொள்ளாத குவாலிட்டி அது. ஆடம் கில்கிறிஸ்ட்டிடம் இருந்த அதே குவாலிட்டி அது.

சூப்பர் ஸ்டார்
இதனை அவர் தொடர்ந்து மேம்படுத்தி வந்தால், நிச்சயம் கில்கிறிஸ்ட்டை தூக்கி சாப்பிடலாம். அதேசமயம், சில லூஸ் பந்துகளில் ரிஷப் அவுட்டாவது உண்மையில் ஏமாற்றம் அளிக்கிறது. கடினமான பந்துகளில் எல்லாம் சுழற்றி வீசுபவர், மிக எளிதான பந்தில், மிகச் சாதாரணமாக தனது விக்கெட்டை பறிகொடுத்து விடுகிறார். அதையும் அவர் நிச்சயம் மாற்றிக் கொள்ள வேண்டும். அதேபோல், ரன்னிங்கில் இன்னும் வேகத்தை கூட்ட வேண்டும். விக்கெட்டுகளுக்கு இடையில் அவர் ஓடும் வேகம் போதாது. தனது சீனியர்களான கோலி, ஜடேஜா போன்றவர்களிடம் இருந்த ரன்னிங் வேகத்தை கூட்டுவதற்கான டிப்ஸ்களை பெற வேண்டும். அவ்வளவு தான்.. இதுபோன்ற சிறிய குறைகளை மட்டும் நிவர்த்தி செய்து கொண்டால், ரிஷப் பண்ட் நிச்சயம், இந்திய கிரிக்கெட் அணியின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவராக வலம் வருவதை யாரும் தவிர்க்க முடியாது.


Click it and Unblock the Notifications