லண்டன்: லண்டனில் நேற்று நடைபெற்ற தீவிரவாத தாக்குதலின் எதிரொலியாக பிர்மிங்காமில் நடைபெற்றவுள்ள கிரிக்கெட் போட்டிக்காக இந்திய வீரர்கள் தங்கியுள்ள ஹோட்டல் பலத்த பாதுகாப்பு வளையத்தில் உள்ளது.
லண்டன் நகரின் மத்திய பகுதியில் உள்ள பாலம், பாரோ மார்க்கெட், வாக்ஸ்ஹால் ஆகிய இடங்களில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். கத்தியால் குத்தியும், வேனை விட்டு மோதியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தினர். இதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று பிர்மிங்காம் நகரில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான சாம்பியன்ஸ் டிராபி போட்டி இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு நடைபெறவுள்ளது. பிர்மிங்காம் நகரத்துக்கும் தீவிரவாத தாக்குதல் நடந்த லண்டனுக்கும் இடைப்பட்ட தூரம் 208 கி.மீ. ஆகும்.
இதுவரை இந்திய- பாகிஸ்தான் போட்டி நடத்த எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்பதால் இன்று திட்டமிட்டப்படி கிரிக்கெட் போட்டி நடைபெறும் என்று ஐசிசி டுவிட்டர் பக்கத்தில் உறுதி அளித்துள்ளது. இந்த போட்டியை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ள போதிலும் மழையால் இந்த போட்டி ரத்து ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்கியுள்ள ஹோட்டல்களுக்கு மர்ம நபர்கள் நுழைய முடியாத படி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. லண்டன் முழுவதும் உஷார் நிலை செய்யப்பட்டுள்ளது.