ஹாங்சோ : ஆசிய கோப்பையில் ஆடி வரும் இந்திய கிரிக்கெட் அணிக்கு சீன ரசிகர்கள் போட்டியின் போது எதிர்ப்பை காட்டி வருகிறார்கள்.
கிரிக்கெட் விளையாட்டைப் பற்றியே பெரிதாக தெரியாத நிலையிலும், இந்திய அணிக்கு எதிராக ஆடும் அணிகளுக்கு முழு ஆதரவை கொடுத்து கூச்சல் போட்டு வருவதாக சில செய்திகள் வெளியாகி உள்ளன.

சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக சீன நடுவர்கள் நடந்து கொள்வதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்த முறை இந்திய கிரிக்கெட் அணி, ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டது.
டி20 போட்டிகள் கொண்ட தொடரில் வெல்லும் அணிக்கு தங்கப் பதக்கம் கிடைக்கும். ஏற்கனவே, இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தங்களுக்கான டி20 தொடரில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றது. அதைப் போல இந்திய ஆண்கள் அணியும் தங்கப் பதக்கம் வெல்லும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்திய அணி காலிறுதிப் போட்டியில் நேபாள அணிக்கு எதிராக ஆடியது. அந்தப் போட்டியை காண சில இந்திய ரசிகர்கள் மைதானத்தில் கூடி இருந்தனர். அதே சமயம், குறிப்பிடத் தகுந்த அளவுக்கு சீனர்களும் அங்கே இருந்தனர். அவர்கள் கிரிக்கெட் என்றால் என்ன என்பதை பார்க்க கூடி இருக்கிறார்கள் என்றே முதலில் எண்ணத் தோன்றியது.
ஆனால், போட்டியின் இடையே நேபாள அணிக்கு ஆதரவாக சீன பாஷையில் குரல் கொடுத்து சிலர் கூச்சல் போட்டுள்ளனர். கிரிக்கெட் குறித்து அதிகம் தெரியாத சீனர்கள், நேபாள அணி வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபடும் போது உடனே அவர்களுக்கு ஆதரவாக கைதட்டி உற்சாகம் ஊட்டுவது என இந்திய அணிக்கு எதிரான மனநிலையில் இருந்தனர்.
இந்தியா - சீனா இடையே எல்லையில் சில பிரச்சனைகள் பல ஆண்டுகளாக நிலவி வருகிறது. மேலும், சீனா, இந்தியாவை தனது முக்கிய போட்டியாளராக, எதிரியாகவே சர்வதேச அரங்கில் காட்டிக் கொள்கிறது. அதை அந்த நாட்டு மக்களும் பிரதிபலிக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.
அதே சமயம், சீன அரசு ஆசிய விளையாட்டுப் போட்டியை தாங்கள் வெற்றிகரமாக நடத்தி விட்டோம் என காட்டுவதற்காக எந்த போட்டியாக இருந்தாலும் அந்த மைதானம் காலியாக இருக்கக் கூடாது என சீனர்களை அங்கே அமர வைத்து இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
அந்த வகையில் கிரிக்கெட் மைதானத்திலும் சீன அரசுக்கு ஆதரவான மக்களுக்கு டிக்கெட் கொடுத்து இருக்கலாம். அதனாலேயே கூட அவர்கள் இந்திய அணியை சீண்டும் வகையில் எதிரணிகளுக்கு ஆதரவான குரலை எழுப்பி இருக்கலாம். இது போன்ற சிறுபிள்ளைத்தனமான விஷயங்களில் சீனா ஈடுபடுவது அற்பத்தனமாக உள்ளது.