மும்பை: இந்திய அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் விளையாட ஆர்வமாக இருப்பதாக நியூசிலாந்து அணியின் கான்வே தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்துள்ளன. இதன் முடிவில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இதில் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா - நியூசிலாந்து மற்றும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன.

இதில் 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றில் நியூசிலாந்து அணியிடம் இந்திய அணி தோல்வியடைந்து வெளியேறியது. அதேபோல் 2021ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதனால் நியூசிலாந்து அணியை எதிர்த்து மீண்டும் இந்திய அணி களமிறங்கவுள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் இந்திய அணிக்கு எதிரான அரையிறுதி போட்டி குறித்து நியூசிலாந்து அணியின் கான்வே பேசுகையில், இந்திய அணி எவ்வளவு சிறந்தது என்பதை அனைவரும் அறிவோம். அவர்கள் வெற்றிக்கான மனநிலையுடன் சிறந்த அணியை கட்டமைத்துள்ளனர். அந்த சவாலை எதிர்கொள்ள ஆர்வமாக இருக்கிறோம். நிச்சயம் உலகக்கோப்பை நடத்தும் அணியை எதிர்த்து அரையிறுதியில் விளையாடுவதற்கு ஆர்வமாக இருக்கிறேன்.
இந்திய அணி நிச்சயம் அபாயகரமான அணி தான். ஆனால் நியூசிலாந்து அணியிலும் சிறந்த அனுபவம் கொண்ட வீரர்கள் இருக்கிறார்கள். உலகக்கோப்பை இறுதிப்போட்டியி விளையாடுவது தான் எங்களின் இலக்கு. அந்த இலக்கை எட்டுவதற்கு அருகில் சென்றுள்ளோம். இந்த உலகக்கோப்பையில் நாங்களும் சிறந்த கிரிக்கெட்டை விளையாடி வருகிறோம். அதனால் இவ்வளவு நாட்கள் செய்ததை அப்படியே தொடர வேண்டும். மற்றதை பற்றி கவலைப்பட தேவையில்லை.
நான் விளையாடும் முதல் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இதுதான். அதனால் அரையிறுதியில் விளையாடவுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. டி20, டெஸ்ட், ஒருநாள் என்று கிரிக்கெட்டின் வெவ்வேறு ஃபார்மெட்டும் வெவ்வேறு சவால்களை அளிக்கிறது. இந்தியாவில் நடக்கும் இந்த உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணியினருடன் இணைந்து விளையாடி வருவதில் மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.