அனுமான் ஒரு விளையாட்டு வீரர்.. உ.பி முதல்வர் யோகிக்கு பதிலடி கொடுத்த முன்னாள் கிரிக்கெட் வீரர்
அம்ரோஹா: உத்தரபிரேதச முதல்வர் யோகி ஆதித்யாநாத் அனுமான் ஒரு தலித் எனக் கூறி கடந்த மாதம் ஒரு புயலை உருவாக்கினார்.
ராஜஸ்தான் தேர்தலை ஒட்டி அவர் பேசிய இந்த சர்ச்சை பேச்சு குறித்த விவாதம் இன்னும் முடிந்தபாடில்லை.
யோகிக்கு பலரும் தங்கள் எதிர்ப்பை பல்வேறு வழியில் கூறி வருகின்றனர். அதில் பலர் தங்கள் பாணியில் அனுமன் யார் எனக் கூறி யோகிக்கு பதிலடி கொடுத்தனர். அந்த வகையில் தற்போது முன்னாள் கிரிக்கெட் வீரர் சேத்தன் சௌஹான் ஒரு பதிலடி கொடுத்துள்ளார்.

அனுமான் ஒரு விளையாட்டு வீரர்
சேத்தன் சௌஹான் கூறுகையில், "அனுமான் ஒரு விளையாட்டு வீரர் என நம்புகிறேன். எதிரிகளோடு அவர் மல்யுத்தம் செய்வார். நம் நாட்டின் அனைத்து விளையாட்டு வீரர்களும் அவரைப் போல பலமும், சக்தியும் பெற்று வெற்றி பெற அவரை வணங்கி வருகின்றனர்" என குறிப்பிட்டார்.

சாதி பார்க்க வேண்டாம்
"அவரது சாதி என்ன எனப் பார்த்து வீரர்கள் அவரை வணங்குவதில்லை. நான் அவரை கடவுளாகப் பார்க்கிறேன். அவரை எந்த சாதியோடும் இணைத்துப் பார்க்க விரும்பவில்லை" என விளக்கம் அளித்தார் சேத்தன்.

தேர்தல் தோல்வி
யோகி ஆதித்யாநாத் ராஜஸ்தான் பிரச்சாரத்தில் தான் இந்த அனுமான் ஒரு தலித் என பேசினார். இப்படிப் பேசினால், தலித் ஓட்டுக்களை அள்ளலாம் என நினைத்து பேசினார் என தெரிகிறது. ஆனால், இறுதியில் ராஜஸ்தான் தேர்தலில் பா.ஜ.க தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் கிளறிய சேத்தன்
அனுமான் குறித்த சர்ச்சையும் அத்தோடு முடிவுக்கு வந்தது என்று நினைத்த வேளையில் சேத்தன் சௌஹான் மீண்டும் அனுமான் சர்ச்சை பேச்சை கிளறி விட்டுள்ளார். இது போன்ற சர்ச்சைகளை கிளறாமல் இருப்பதே நல்லது.


Click it and Unblock the Notifications